எந்தக் கருவி தனது பார்வையைப் பறித்ததோ, அதே கருவியை மனிதகுலத்தின் பார்வையாக மாற்றிய ஒரு வாழ்க் கைக் கதை இது. ஒரு விபத்து, ஒரு இழப்பு, ஒரு துன்பம் அவை எல்லாம் சேர்ந்து உலகத்தின் வரலாற்றையே மாற்றிய தருணம். அந்த மாற்றத்தின் மையத்தில் இருந்தவர் லூயிஸ் பிரெய்லி.
பார்வை இல்லாதவர்கள் என்றாலே ஒருகாலத்தில் சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட படிமமே இருந்தது. கல்வி, அறிவு, முன்னேற்றம் இவையெல்லாம் அவர்களுக்குச் சாத்தியமில்லை என்ற எண்ணம் ஆழமாக வேரூன்றியிருந்தது. பேச முடியாதவ ர்களுக்கு சைகை மொழி இருந்தது; கேட்க முடியாதவர்களுக்கு பார்வை இருந்தது. ஆனால் பார்வை இல்லாதவர்களுக்கு? கல்வி என்பது கனவாகவே இருந்த காலம் அது. அத்தகைய சூழலில், அவர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாக இருந்த சமயத்தில், ஒரு குழந்தையின் வாழ்க்கை உலகின் விதியையே மாற்றத் தொடங்கியது.
1809 ஆம் ஆண்டு பிரான்சில் பிறந்த அந்தக் குழந்தை, தந்தையின் பட்டறையில் விளையாடிக்கொண்டிருந்தபோது, ஒரு கூர்மையான கருவியால் கண் காயம் அடைந்தது. மூன்று வயதில் ஒரு கண்ணையும், ஐந்து வயதில் முழுப்பார்வையை யும் இழந்தது. ஆனால் அந்த இழப்பே அவனது பார்வையை உலகம் முழுவதும் விரிய வைத்தது. துன்பத்தில் துவண்டு போகவில்லை அந்தக் குடும்பம். பார்வையற்றோருக்கான ஒரே பள்ளியில் அந்தக் குழந்தை சேர்க்கப்பட்டது. அங்கு கற்றுக் கொடுக்கப்பட்ட கல்விமுறை அவனுக்கு திருப்தி அளிக்க வில்லை. “இது போதாது” என்ற உள்ளுர் குரல் அவனை இடைவிடாது தொந்தரவு செய்தது.
பதினைந்து வயதிலேயே, “பார்வையற்றோர் பிறரின் இரக்கத்தில் அல்ல, தங்கள் அறிவின் பலத்தில் வாழ வேண்டும்” என்ற தீர்மானத்துடன் அவர் ஆராய்ச்சியில் இறங்கினார். இரவும் பகலும், சிந்தனையும் முயற்சியும் இணைந்து, ஆறு புள்ளிகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு புதிய எழுத்து முறை உருவானது. அந்த ஆறு புள்ளிகள் மொழியாக மாறின; அறிவாக மாறின; வாழ்க் கையாக மாறின. இலக்கியம், கணிதம், அறிவியல், இசை என எல்லாம் அந்த புள்ளிகளுக்குள் அடங்கின.
ஆரம்பத்தில் அந்தக் கண்டுபிடிப்பு நிராகரிக்கப்பட்டது. அவமதிப்பும், அலட்சியமும் சந்தித்தது. ஆனால் அவர் நின்றுவிடவில்லை. தொடர்ந்து உழைத்தார். இறுதியில், உலகம் ஏற்றுக்கொண்டது. இன்று நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் அந்த முறை பயன்படுத்தப்படுகிறது. கோடிக் கணக்கான பார்வைச் சவால் உள்ளவர்களுக்கு அது கண்களாக மாறியு ள்ளது. மருத்துவர், வழக்கறிஞர், பேராசிரியர், நிர்வாகி என எல்லாத் துறைகளிலும் அவர்கள் சாதிக்க முடியும் என்பதை அந்த ஆறு புள்ளிகள் நிரூபித்துள்ளன.
இறைமக்களே, தேவன் ஒவ்வொரு தலைமுறையிலும் சிலரை எழுப்புகிறார். அவர்கள் பெரிதாகப் பேசுவதில்லை; ஆனால் அவர்கள் வாழ்வின் மூலம் வரலாறு பேசுகிறது. அவர்கள் வசதியைத் தேடுவதில்லை; பொறுப்பை ஏற்றுக்கொள் கிறார்கள். அவர்கள் “எனக்கு என்ன?” என்று கேட்பதில்லை; “என் மூலம் யாருக்கு என்ன?” என்று சிந்திக்கிறார்கள்.
இன்றைய கிறிஸ்தவ வாழ்வு நமக்கு ஒரு வசதியான மத அனுபவமாக மாறிவிட்டதா என்ற கேள்வி நம்மை நேரடியாக எதிர்கொள்கிறது. ஆராதனை, ஜெபம், பாடல்கள் இவை எல்லாம் நம் உள்ளத்தைத் திருப்திப்படுத்துவதற்காக மட்டுமா? பிறரின் இருளை அகற்ற தேவன் நம்மை பயன் படுத்த வேண்டிய கருவிகளாக நாம் மாறுகிறோமா?
கிறிஸ்தவன் என்பவன் பார்வையாளனாக அல்ல, பங்கேற்பாளனாக இருக்க வேண்டும். நம்பிக்கை என்பது பேச்சில் அல்ல, நம் நடக்கையிலுள்ளது. சுவிசேஷம் சொற்களில் அல்ல, நம் தியாகத்தில் தெரிய வேண்டும்.
லூயிஸ் பிரெய்லி தனது பார்வையை இழந்தார். ஆனால் மனிதகுலத்திற்கு பார்வை கொடுத்தார். ஆம், ஒரு தலைமுறை யின் கண்ணீர், இன்னொரு தலைமுறையின் சாட்சியாக மாற வேண்டும். அதற்கு யாரோ ஒருவர் இன்றே விலை கொடுக்க வேண்டும். அந்த “யாரோ ஒருவர்” நீங்களாக இருக்கலாமே?
நம் நேரம், நம் அறிவு, நம் வளங்கள், நம் திறமைகள் இவையெல்லாம் தேவனுடைய ராஜ்யத்துக்காக பயன்படுத்தப் படுகிறதா? அல்லது நம் சுய முன்னேற்றத்திலேயே முடங்கிக் கிடக்கிறதா?
தேவன் உன்னை ஆசீர்வதிப்பதற்காக மட்டும் அழைக்கவில்லை; மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக மாற்றவே அழைத்தார். உன் கைகளில் இருக்கும் சிறியது, தேவனுடைய கைகளில் போனால் பெரிய மாற்றமாகும். நீ வசதியாக வாழலாம்; ஆனால் நீ தியாகமாக வாழ்ந்தால்தான் வரலாறு மாறும்.
இன்றைய கிறிஸ்தவர்களுக்கு தேவையானது இன்னொரு உபதேசம் அல்ல. இன்னொரு மாநாடும் அல்ல. தேவையானது ஒரு தீர்மானம்.
“கர்த்தாவே, என் வாழ்க்கை எனக்காக மட்டுமல்ல, என் உழைப்பு என் குடும்பத்திற்காக மட்டுமல்ல, என் அழைப்பு இந்த தலைமுறைக்காக, என் தியாகம் வருகிற சந்ததிக்காக.”
ஒளி காண விரும்பும் உலகிற்கு, நீ ஒளியாய் மாறத் தயாரா? கேள்விகள் நிறைந்த சமுதாயத்திற்கு, நீ பதிலாக மாற விரும்புகிறாயா? தேவன் எழுதும் வரலாற்றில், உன் வாழ்க்கையும் ஒரு பக்கமாக இடம் பெற வேண்டாமா?
“கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும், செத்ததேயாகில் மிகுந்த பலனைக்கொடுக்கும்.” (யோவான் 12:24)
இன்றே தீர்மானிப்போம்! வாழ்வதற்காக மட்டும் அல்ல; ஒரு தலைமுறையை வாழ வைப்பதற்காக.
– போதகர். பெ. பெவிஸ்டன்