ஒரு வாலிபன் தனது வயலில் தினமும் உழைத்து வந்தான். வெயிலும் மழையும் பொருட்படுத்தாமல் உழைப்பதே அவன் வாழ்க்கை. ஒருநாள், வழக்கம்போல் மண்ணை உழுது கொண்டிருந்தபோது, அவனுக்கு ஒரு ஆச்சரியமான அனுபவம் கிடைத்தது. மண்ணுக்குள் சில வெள்ளிக்காசுகள் கிடைத்தன. அந்தச் சிறிய கண்டுபிடிப்பு அவனை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
“இந்த நிலத்தின் அடியில் ஒரு பெரிய புதையல் இருக்கிறது!” என்ற எண்ணம் அவனுடைய மனதில் உருவானது. அந்த எண்ணமே அவனுக்கு புதிய உற்சாகத்தை அளித்தது. இதுவரை சாதாரண வேலை என எண்ணிய உழைப்பு, இப்போது ஒரு பெரும் எதிர்பார்ப்புடன் கூடிய தேடலாக மாறியது.
அவன் இன்னும் தீவிரமாக தோண்டத் தொடங்கினான். ஒவ்வொரு அடி தோண்டும்போதும், “இன்னும் பெரிய செல்வம் கிடைக்கும்” என்ற நம்பிக்கை அவனுள் பெருகிக் கொண்டே இருந்தது. காசுகள் மீண்டும் மீண்டும் கிடைத்த போது, அவனுடைய நம்பிக்கை மேலும் உறுதியானது.
ஆனால் சில நேரம் கழித்து, அவன் தன்னிடமே ஒரு கேள்வியை எழுப்பினான்: “இந்தக் காசுகள் இங்கே எப்படி வருகிறது?” என்ற சந்தேகம் அவனை சிந்திக்க வைத்தது. அவன் தன் உடலை, தன் சுற்றுப்புறத்தை கவனமாக பார்த்தான். பின்னர் தன் சட்டைப்பையை தடவி பார்த்தான்.
அந்த நொடியில் உண்மை வெளிச்சம் பெற்றது. அவனுடைய சட்டைப்பை ஓட்டையாக இருந்தது. அவனுடைய பையில் இருந்த காசுகள் கீழே விழுந்து, மண்ணில் கலந்து விட்டன. அவற்றையே புதையல் என்று நினைத்து அவன் தோண்டிக் கொண்டிருந்தான். அவன் தேடிய புதையல், வெளியில் இல்லை; அவனுக்குள்ளே இருந்தது.
இறைமக்களே, இந்தச் சிறிய சம்பவம் நமக்கென்று ஒரு ஆழமான வாழ்க்கை உண்மையை எடுத்துரைக்கிறது. நாம் பல நேரங்களில் ஆசீர்வாதங்களையும், வெற்றியையும், சந்தோஷத்தையும் வெளியில் தேடி அலைகிறோம். “அங்கே சென்றால் வெற்றி கிடைக்கும்”, “இதைக் பெற்றால் சந்தோஷம் வரும்”, “அவரைப் போல இருந்தால் வாழ்க்கை மாறும்” என்று எண்ணிக்கொண்டு, வெளிப்புற விஷயங்களைத் தொடர்ந்து தேடிக் கொண்டிருக்கிறோம்.
ஆனால் உண்மை என்னவென்றால் நாம் தேடுகிற பல விஷயங்கள் ஏற்கனவே நமக்குள் இருக்கின்றன. தேவன் ஒவ்வொருவரையும் வெறுமையாக படைக்கவில்லை. அவர் ஒவ்வொருவருக்கும் தனித்துவமான வரங்களையும் திறமைக ளையும் வைத்திருக்கிறார். விசுவாசம், தைரியம், நம்பிக்கை, பொறுமை, ஞானம், அன்பு, சேவை மனம் இவை எல்லாம் வெளியில் வாங்கிக் கொள்ள வேண்டியவை அல்ல; நமக்குள் விதைக்கப்பட்டவை.
உலகம் எப்போதும் “வெளியில் தேடு” என்று சொல்லும். ஆனால் தேவன் “உன்னுள் இருப்பதை அறிந்துகொள்” என்று அழைக்கிறார். ஒருவருக்கு பாடும் திறன் இருக்கலாம். மற்றொருவருக்கு பேசும் திறன் இருக்கலாம். இன்னொருவருக்கு உதவி செய்யும் மனம் இருக்கலாம். சிலருக்கு வழிகாட்டும் ஞானம் இருக்கும். சிலருக்கு ஆறுதல் அளிக்கும் இதயம் இருக்கும். இவை அனைத்தும் சாதாரண விஷயங்கள் அல்ல; தேவன் நமக்குள் வைத்திருக்கும் புதையல்கள்.
ஆனால் ஒரு உண்மை இருக்கிறது: பயன்படுத்தப் படாத திறமை, புதையலாகவே மறைந்து விடும். நமக்குள் இருக்கும் வரங்களை நாம் அறியாமல் விட்டுவிட்டால், அது இல்லாதது போலவே ஆகிவிடும். திறமை இருந்தும் அதை பயன்படுத்தாதவன், செல்வம் இருந்தும் அதை அனுபவிக் காதவன் போன்றவன்.
இறைமக்களே, நாம் வெளியில் ஓடிக்கொண்டே நமது வாழ்க்கையை இழக்க வேண்டியதில்லை. “இந்த இடம்தான் வெற்றி தரும்”, “அந்த வாய்ப்புதான் வாழ்க்கையை மாற்றும்” என்று ஓடிக்கொண்டே இருந்தால், நமக்குள் இருக்கும் பெரும் வலிமையை நாம் மறந்துவிடுவோம். புதையல்கள் மண்ணுக்குள் மட்டும் கிடைப்பதில்லை. அவை நம் உள்ளத்திலும், நம் மனதிலும், நம் ஆவியிலும் மறைந்து கிடக்கின்றன. அவற்றை கண்டுபிடிக்க வேண்டும். அவற்றை வளர்த்தெடுக்க வேண்டும். அவற்றை பிறருக்குப் பயனாக மாற்ற வேண்டும்.
நாம் இன்று ஒரு தீர்மானம் எடுக்க வேண்டும்:
· நான் வெளியில் மட்டும் தேடமாட்டேன்
· என்னுள் இருக்கும் வரங்களை அறிந்து வளர்ப்பேன்
· தேவன் கொடுத்த தாலந்துகளை பயன்படுத்துவேன்
நாம் நமக்குள் இருக்கும் திறமைகளை உணர்ந்து, அதை வளர்த்து, செயல்படுத்தும்போது, நம்முடைய வாழ்க்கை மட்டும் அல்ல; நம்மைச் சுற்றியுள்ளவர்களின் வாழ்க்கையும் ஆசீர்வாதமாக மாறும்.
முடிவாக, நாம் நினைவில் கொள்ள வேண்டியது இதுதான்: நாம் தேடுகிற புதையல் தொலைவில் இல்லை. அது நமக்குள் தான் உள்ளது. அதை கண்டுபிடியுங்கள்; அதை பயன்படுத்துங்கள்; உங்கள் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றுங்கள்.
– போதகர். பெ. பெவிஸ்டன்