ஒருவன் தனது வண்டியில் நிறைய தேங்காய்களை ஏற்றி, வேறு ஒரு ஊரில் உள்ள கடைக்குக் கொண்டு செல்லப் பயணம் செய்தான். அவன் மனதில் ஒரே எண்ணம் “எப்படி இருந்தாலும் சீக்கிரமாகச் சென்று சேர வேண்டும்.” ஆனால் அவன் செல்ல வேண்டிய வழி அவனுக்கு சரியாகத் தெரியாது. எனவே, வழியிலே யாரிடமாவது கேட்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
ஒரு இடத்தில் அவன் வண்டியை நிறுத்தி, அங்கு நின்றிருந்த ஒரு பெரியவரிடம் வழி கேட்டான். அந்த பெரியவர் அமைதியாக ஒரு நேரான சாலையைச் சுட்டிக் காட்டி, “இந்த வழியாகச் சென்றால் முக்கால் மணி நேரத்தில் அந்த ஊரை அடைந்து விடலாம்” என்றார். அதை கேட்ட வண்டியோட்டி உடனே ஒரு கேள்வி கேட்டான்: “நான் வேகமாக ஓட்டினால் இன்னும் சீக்கிரம் சென்று விடலாமே?” அதற்கு அந்த பெரியவர் சிரித்தபடி, “இல்லை, வேகமாக சென்றால் ஒன்றரை மணி நேரமாகிவிடும்” என்று கூறினார்.
இந்த பதில் அவனுக்கு புரியவில்லை. “இவர் என்னை கிண்டல் செய்கிறார்” என்று எண்ணிக் கொண்டான். அந்த அறிவுரையை பொருட்படுத்தாமல், வண்டியை வேகமாக ஓட்டத் தொடங்கினான். சாலை கரடுமுரடாக இருந்தது. வழியில் குழிகளும் பள்ளங்களும் இருந்தன. ஆனால் அவன் அவற்றைப் பொருட்படுத்தவில்லை. “வேகமாக சென்றால் சீக்கிரம் சென்று விடலாம்” என்ற எண்ணம் அவனை கட்டுப்படுத்தியது.
ஒரு திருப்பத்தில் பெரிய பள்ளம் ஒன்று இருந்தது. அவன் வேகமாக வந்ததால், வண்டியை கட்டுப்படுத்த முடிய வில்லை. ஒரு சக்கரம் பள்ளத்தில் இறங்க, வண்டி சாய்ந்தது. அதில் இருந்த தேங்காய்கள் அனைத்தும் சாலையில் சிதறி விழுந்தன.
இப்போது அவனுக்கு வேறு வழியில்லை. அவன் வண்டியை நிறுத்தி, கீழே இறங்கி, சிதறிக் கிடந்த தேங்காய்களை ஒன்றன்பின் ஒன்றாக எடுத்து மீண்டும் அடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்த வேலைக்கே அரை மணி நேரத்திற்கும் மேலாக ஆகிவிட்டது. அப்போது தான் அவனுக்கு அந்த பெரியவரின் வார்த்தையின் அர்த்தம் புரிந்தது. “வேகமாக சென்றால் தாமதமாகிவிடும்” என்றது கிண்டல் அல்ல; அனுபவத்திலிருந்து வந்த உண்மை.
இறைமக்களே, இந்தச் சம்பவம் நமது வாழ்க் கையையும் பிரதிபலிக்கிறது. இன்றைய உலகில் மனிதர்கள் எல்லோரும் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் அவசரம். எல்லாவற்றையும் சீக்கிரமாகப் பெற வேண்டும் என்ற எண்ணம் அனைவரையும் ஆள்கிறது. மாணவர்கள் சீக்கிரம் படித்து முடிக்க விரும்புகிறார்கள். படித்து முடித்தவர்கள் சீக்கிரம் வேலை கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். வேலை செய்பவர்கள் சீக்கிரம் பணம் சம்பாதித்து வாழ்க்கையில் உயர வேண்டும் என்று ஓடுகிறார்கள். வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் “சீக்கிரம்” என்ற வார்த்தை நம்மை துரத்திக்கொண்டே இருக்கிறது. ஆனால் ஒரு விஷயத்தில் மட்டும் யாருக்கும் அவசரம் இல்லை வயதாக வேண்டும் என்பதில். ஏனெனில் வயதுடன் பலம் குறையும், சுதந்திரம் குறையும் என்பதை நாம் அறிவோம்.
இறைமக்களே, வாழ்க்கையில் எல்லாவற்றையும் சீக்கிரமாகப் பெற வேண்டும் என்று நினைக்கும் போது, நாம் ஒரு முக்கியமான விஷயத்தை மறந்து விடுகிறோம் அது அனுபவம்.
அனுபவம் என்பது காலத்தால் மட்டுமே கிடைக்கும் ஒரு செல்வம். அதை எந்த வழியிலும் விரைவாகப் பெற முடியாது. அனுபவமின்றி கிடைக்கும் வெற்றி, நீடிக்காது. ஒரு வேதாகம உவமை இதை தெளிவாகக் காட்டுகிறது. ஒரு இளைஞன் தன் தகப்பனின் சொத்திலிருந்து தன் பங்கை முன்கூட்டியே பெற்று, “நான் சீக்கிரம் வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும்” என்ற எண்ணத்தில் தனியாகச் சென்றான். ஆனால் அனுபவமின்மையால், அவன் பெற்ற அனைத்தையும் விரைவாக இழந்துவிட்டான்.
இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது தெளிவாக உள்ளது: அவசரம் முன்னேற்றம் அல்ல; அது பல நேரங்களில் பின்னடைவை ஏற்படுத்தும். நிதானமாக வளர்ந்தது மட்டுமே நிலைத்திருக்கும்.
ஒரு மரம் மெதுவாக வளரும்போது அதன் வேர்கள் ஆழமாகப் பதியும். அதனால் அது நீண்ட காலம் நிலைத் திருக்கும். அதேபோல், வாழ்க்கையிலும் நிதானமாக பெற்ற முன்னேற்றம் தான் உறுதியானதாக இருக்கும்.
நாம் வாழ்க்கையில் சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலை யும், ஒவ்வொரு மனிதரும், ஒவ்வொரு சோதனையும் நமக்கு ஒரு பாடம் கற்றுக்கொடுக்கிறது. அந்த அனுபவங்கள் தான் நம்மை உருவாக்குகின்றன. ஆனால் நாம் எல்லாவற் றையும் சீக்கிரத்தில் பெற்றுவிட்டால், அந்த அனுபவத்தை நாம் இழந்து விடுவோம்.
இறைவேதம் கூறுகிறது: “நிதானமாய் நடக்கிறவன் கர்த்தருக்குப் பயப்படுகிறான்; தன் வழிகளில் தாறுமாறா னவனோ அவரை அலட்சியம்பண்ணுகிறான்.” இந்த வசனம் நமக்கு நிதானத்தின் மதிப்பை நினைவூட்டுகிறது. ஆகையால் இறைமக்களே, வாழ்க்கையில் அவசரப்படாதீர்கள். ஒவ்வொரு படியையும் சிந்தித்து எடுத்து வையுங்கள். தேவன் நிர்ணயித்த காலத்தை மதியுங்கள். அவர் கொடுத்த பாதையில் நிதானமாக முன்னேறுங்கள்.
வேகம் சில நேரங்களில் வெற்றியைத் தரலாம்; ஆனால் அது நிலைத்திருக்காது. நிதானம் தான் நிலையான வெற்றியைத் தரும்.
முடிவாக நாம் நினைவில் கொள்ள வேண்டியது இதுதான்:
· அவசரம் தாமதத்தை உண்டாக்கும்
· நிதானம் வெற்றியை உருவாக்கும்
எனவே, அவசரத்தை விடுங்கள்; நிதானத்தைத் தேர்ந்தெடுங்கள்; அப்பொழுது உங்கள் வாழ்க்கை நிலையான ஆசீர்வாதமாக மாறும்.
– போதகர். பெ. பெவிஸ்டன்