ஸ்டான்லி என்பவர் ஒரு தனியார் நிறுவனத்தில் மேற்பா ர்வையாளராகப் பணியாற்றி வந்தார். திறமையானவராக இருந்தாலும், மற்றவர்களை கேலி செய்து பேசுவது அவரது பழக்கமாக இருந்தது. அவருடைய வார்த்தைகள் பலரையும் சிரிக்க வைத்தாலும், சிலரின் மனங்களை அமைதியாக காயப்படுத்திக் கொண்டே இருந்தன.
ஒருநாள், வழக்கம்போல் சக பணியாளர்களுடன் மதிய உணவருந்திக் கொண்டிருந்தார். அப்போது அவர் தன் மேலாளரைப் பற்றிக் கேலியாகவும் இழிவாகவும் பேசத் தொடங்கினார். அவரது வார்த்தைகள் எல்லையைத் தாண்டி யதால், அங்கு இருந்த சிலர் அதிருப்தியடைந்தனர். அந்தச் சம்பவம் விரைவில் மேலாளரின் காதிற்கும் எட்டியது.
உடனே மேலாளர், ஸ்டான்லியை தனது அலுவலக அறைக்கு வரவழைத்தார். அமைதியாக அவர் கேட்டார்: “நீங்கள் என்னைப் பற்றி இழிவாகப் பேசியது உண்மையா?” ஸ்டான்லி தயக்கத்துடன், “ஆமாம் ஐயா, என்னை மன்னித்துவிடுங்கள்” என்று கூறினார்.
அதற்கு மேலாளர் கடுமையாக எச்சரித்தார்: “நீங்கள் எதைப் பேச வேண்டுமானாலும் என் முன்னிலையில் நேராகப் பேசுங்கள். ஆனால் பின்னால் இருந்து இழிவாகப் பேசுவது ஏற்றுக்கொள்ள முடியாது. இதுபோன்ற செயல் மீண்டும் தொடர்ந்தால், ஆபத்தான பின் விளைவுகளை சந்திக்க வேண்டியது இருக்கும்.”
இந்த வார்த்தைகள் ஸ்டான்லியின் மனதை ஆழமாகப் புண்படுத்தின. அவமானத்துடன் அவர் அறையை விட்டுவெளியே வந்தார். அன்று முழுவதும் அவர் மன அமைதியின்றி இருந்தார். தன் தவறை உணர்ந்தாலும், மனத்தில் ஒரு கனமான சுமை தங்கியிருந்தது.
வேலை முடிந்து வீட்டிற்கு வந்த ஸ்டான்லி, தனது அறையில் அமைதியாக அமர்ந்து நடந்ததை நினைத்து வருந்திக் கொண்டிருந்தார். அதை கவனித்த அவரது மனைவி, என்ன நிகழ்ந்தது என்று கேட்டார்.
அவர் நடந்ததை முழுமையாகச் சொன்னார். கவனமா கக் கேட்ட மனைவி மெதுவாகக் கூறினாள்: “நீங்கள் செய்த து தவறு. ஆனால் அதை நீங்கள் ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டுள்ளீர்கள். இருந்தும் மனம் அமைதியில்லை என்றால், உங்கள் அறையை ஜெப அறையாக்குங்கள். தேவனிடம் மனம் திறந்து பேசுங்கள். மன்னிப்பின் உறுதியை அவர் தருவார்.”
இந்த ஆலோசனை ஸ்டான்லிக்கு புதிய ஒளியைத் தந்தது. உடனே அவர் முழங்காலில் மண்டியிட்டு ஜெபித்தார்: “கர்த்தாவே, நான் தவறு செய்தேன். என் வார்த்தைகளால் பலரின் மனதைப் புண்படுத்தியுள்ளேன். என்னை மன்னியுங் கள். இனிமேல் யாரையும் கேலி செய்யாமல், அவர்களின் மனதை மதிக்கும் வாழ்க்கையை நடத்துவேன். நான் காயப்படுத்திய அனைவரிடமும் சமாதானமாக இருப்பதற்கு எனக்கு உதவுங்கள்.”
இந்த உண்மையான மனமாற்றத்தின் ஜெபத்துக்குப் பின், அவரது உள்ளத்தில் ஒரு ஆழ்ந்த சமாதானம் நிலவத் தொடங்கியது. மனம் இலகுவானது. அடுத்த நாள் ஸ்டான்லி அலுவலகத்திற்கு புதிய உற்சாகத்துடன் சென்றார். முன்னாள் ஸ்டான்லியிலிருந்து மாறுபட்டவர் போல இருந்தார். அவர் முன்பு தன் வார்த்தைகளால் யாரை யாரை காயப்படுத்தியிரு ந்தாரோ, அவர்கள் ஒவ்வொருவரிடமும் சென்று மன்னிப்பு கேட்டார். சிலர் ஆச்சரியப்பட்டனர்; மகிழ்ந்தனர்; ஆனால் அனைவரும் அவரது மாற்றத்தை உணர்ந்தனர். அவரது வாழ்க்கை அந்த நாளிலிருந்து புதிய திசையை எடுத்தது.
இறைமக்களே, ஒருவரை “கேலி” என்ற பெயரில் இழிவுபடுத்துவது சரியா? ஒருவரின் உடல் அமைப்பையோ, குறைகளையோ, இயலாமைகளையோ சிரிப்பிற்கான பொரு ளாக மாற்றுவது மனிதநேயமா? நம் மகிழ்ச்சிக்காக மற்றொரு வரின் மனதை காயப்படுத்துவது, சகோதர அன்பிற்கு முற்றிலும் எதிரானது. ஒருவர் முன்னிலையில் ஒரு பேச்சு, அவரில்லாதபோது வேறு பேச்சு. இது உண்மையான மனித நேயமல்ல.
இறைவேதம் இவ்வாறு அறிவுறுத்துகிறது:
“மனுஷனுக்குத் தன் வாய்மொழியினால் மகிழ்ச்சி உண்டாகும்; ஏற்ற காலத்தில் சொன்ன வார்த்தை எவ்வளவு நல்லது!” (நீதிமொழிகள் 15:23)
“மனுஷனுடைய இருதயத்திலுள்ள கவலை அதை ஒடுக்கும்; நல்வார்த்தையோ அதை மகிழ்ச்சியாக்கும்” (நீதி.12:25)
நாம் அனைவரும் ஒரே மனிதக்குடும்பத்தைச் சேர்ந்த சேர்ந்த ஒருதாய் பிள்ளைகள்தான். சாதி, மதம், இனம், மொழி, கலாச்சாரம் போன்ற வேறுபாடுகளைத் தாண்டி, ஒருவரை ஒருவர் மதிக்கும் மனப்பாங்கு நமக்குள் வளர வேண்டும்.
நம் வார்த்தைகள் ஒரு ஆயுதமாக இருக்கலாம்; அதே நேரத்தில், அது ஒரு மருந்தாகவும் இருக்கலாம். எதைத் தேர்ந்தெடுப்பது என்பது நம்மிடமே இருக்கிறது. நம் வார்த்தைகள் தாக்குவதற்கு அல்ல – தாங்குவதற்கே.
– போதகர். பெ. பெவிஸ்டன்