ஒரு மனிதர் தனது 45-ஆவது வயதில் மனைவியை இழந்தார். வாழ்க்கையின் மிகப் பெரிய இழப்பைச் சந்தித்த அந்த நேரத்தில், உறவினர்களும் நண்பர்களும் அவரை மறுமணம் செய்து கொள்ளுமாறு பலமுறை வற்புறுத்தினர். “இன்னும் வயது இருக்கிறது; வாழ்க்கை முன்னால் உள்ளது” என்று அவர்கள் கூறினார்கள்.
ஆனால் அவர் திடமாக மறுத்தார்: “என் மனைவி எனக்கு ஒரு மகனை விட்டுச் சென்றிருக்கிறாள். அவனே என் வாழ்க்கையின் அர்த்தம். அவனை வளர்த்து நல்ல மனிதனாக் குவது தான் இனி என் கடமை. அவன் மகிழ்ச்சியில் நான் மகிழ்வேன்; அவன் வெற்றியில் நான் நிறைவை அடைவேன். எனக்கு இன்னொரு துணை தேவையில்லை” என்று உறுதியா கச் சொன்னார்.
அந்த நாளிலிருந்து அவர் தன் முழு வாழ்க்கையை யும் தனது மகனுக்காக அர்ப்பணித்தார். தாய் இல்லாத குறையை உணராமல் வளர்க்க, தந்தை இரட்டிப்பு அன்புடன் அவனைப் பராமரித்தார். கல்வி, ஒழுக்கம், வாழ்க்கை நெறி – அனைத்திலும் அவனை உயர்த்தினார்.
காலம் விரைந்து ஓடியது. மகன் வளர்ந்து பெரிய வனானான். தந்தை தன் உழைப்பால் சேர்த்த வீடும், வியாபாரமும் அனைத்தையும் மகனின் பெயரில் எழுதி கொடுத்து, தானோ ஓய்வு பெற்றார். பின்னர் மகனுக்கு திருமணம் செய்து வைத்து, அவர்களுடனேயே அமைதியாக வாழத் தொடங்கினார். ஒரு வருடம் இவ்வாறு சென்றது.
ஒரு நாள், வழக்கத்தை விட சற்றுச் சீக்கிரமாக காலை உணவு உண்ண வந்தார். மருமகளிடம், “ரொட்டிக்கு சிறிது வெண்ணெய் தர முடியுமா?” என்று மெதுவாகக் கேட்டார். அதற்கு மருமகள், “வெண்ணெய் இல்லை” என்று அலட்சியமாகச் சொல்லிவிட்டாள்.
அந்த நேரத்தில் மகனும் அங்கு இருந்தான். எதையும் பேசாமல் தந்தை வெறும் ரொட்டித் துண்டை உண்டு விட்டு எழுந்து சென்றார்.
சிறிது நேரத்தில் மகன் உணவருந்த அமர்ந்தபோது, அதே மேசையில் மருமகள் வெண்ணெயைக் கொண்டு வந்து வைத்தாள். இதைக் கண்ட மகன் ஒன்றும் பேசவில்லை. ஆனால் அந்தச் சம்பவம் அவன் மனதில் ஆழமாகப் பதிந்தது. அந்த நாள் முழுவதும் அதைப் பற்றிய சிந்தனையே அவனை விட்டு நீங்கவில்லை.
மறுநாள் காலையில், மகன் தன் தந்தையை அழைத்து, “அப்பா, வாருங்கள், நாம் வக்கீலைப் பார்த்து வரலாம்” என்றான். தந்தை ஆச்சரியத்துடன், “எதற்காக?” என்று கேட்டார். மகன் அமைதியாக பதிலளித்தான்: “நானும் என் மனைவியும் ஒரு வாடகை வீட்டிற்கு குடிபோகிறோம். நீங்கள் என் பெயரில் எழுதி வைத்துள்ள வீடும், வியாபாரமும் அனைத்தையும் மீண்டும் உங்கள் பெயருக்கே மாற்றிக் கொள்ளுங்கள். இனிமேல் நான் இந்த சொத்துகளில் எந்த உரிமையும் கோரமாட்டேன். மாதம் சம்பளம் வாங்கும் சாதாரண தொழிலாளியாக வாழ்கிறேன்.”
இதைக் கேட்ட தந்தை அதிர்ச்சியடைந்து, “என்ன இது? ஏன் இப்படி திடீர் முடிவு?” என்று கேட்டார். மகன் கண்களில் ஈரத்துடன் கூறினான்: “அப்பா, உங்கள் மதிப்பு என்ன என்பதை என் மனைவிக்கு உணர்த்த வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது. ஒரு சாதாரண வெண்ணெய்க்காக நீங்கள் யாரிடமும் கையேந்த வேண்டிய நிலை வரக்கூடாது. நீங்கள் எனக்கு கொடுத்த வாழ்க்கையின் மதிப்பை அவள் புரிந்து கொள்ள வேண்டும். தயவு செய்து எனக்கு மறுப்பு சொல்லாதீர்கள்.”
தந்தை, மகனின் மனநிலையைப் புரிந்து கொண்டு அமைதியாக நின்றார். அந்த நேரத்தில், ஒரு உண்மை தெளிவானது. அன்பால் வளர்க்கப்பட்ட மகன், அன்பின் மதிப்பை உணர்ந்திருந்தான்.
இறைமக்களே, இந்தக் கதை நமக்கு ஒரு ஆழமான உண்மையை எடுத்துரைக்கிறது. பெற்றோர் பிள்ளைகளுக்கு பல நேரங்களில் தேவைகளை நிறைவேற்றித் தரும் “ஏ.டி.எம். கார்டு” போல இருக்கலாம். ஆனால் பிள்ளைகள் தங்கள் பெற்றோருக்குப் “ஆதார் அட்டை” போன்றவர்கள் போல மாற வேண்டும். கரணம் பெற்றோர்கள் தான் வாழ்வின் அடையாளம், பெருமை, ஆதாரம்.
இன்றைய தலைமுறையில், “உங்களுக்கு என்ன தெரியும்? நீங்கள் பழைய காலத்தவர்கள்! இது 21-ஆம் நூற்றாண்டு!” என்று சொல்லி பெற்றோரின் அனுபவத்தை மதிக்காமல் விடும் நிலை அதிகரித்து வருகிறது. ஆனால் ஒரு உண்மையை நாம் மறக்கக் கூடாது: பெற்றோர் இல்லாமல், நமக்கு அடையாளமே இல்லை.
திருமறை இவ்வாறு கூறுகிறது:
“உன்னைப் பெற்ற தகப்பனுக்குச் செவி கொடு; உன் தாய் வயது சென்றவளாகும்போது அவளை அசட்டை பண்ணாதே” (நீதிமொழிகள் 23:22). மேலும், பத்துக் கட்டளைகளில் வாக்குத்தத்தத்துடன் கூடிய கட்டளை இதுவே:
“உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற தேசத்தில் உன் நாட்கள் நீடித்திருக்கும்படி, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம் பண்ணுவாயாக” (யாத்திராகமம் 20:12).
ஆகையால்,
பெற்றோரை புறக்கணிப்பது என்பது,
கடவுளின் வார்த்தையையே புறக்கணிப்பதற்கு சமம்.
அவர்கள் வயதாகும் போது,
அவர்களை மதிப்போம்.
அவர்களை கவனிப்போம்.
அவர்களின் தியாகங்களை நினைவில் கொள்ளுவோம்.
நாம் இன்று இருப்பதற்குக் காரணம் அவர்கள். நாம் உயர வேண்டும் என்றால், அவர்களை உயர்த்த வேண்டும்.
– போதகர். பெ. பெவிஸ்டன்