முதுகில் குத்தப்பட்ட முதல் கத்தியை பிடுங்கிப் பார்த்தேன். அதில் “நட்பு” என்ற பெயரில் நாடகமாடியவர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டிருந்தது. இதனை நான் ஓரளவு முன்கூட்டியே உணர்ந்திருந்தேன். ஆகையால் அந்த வலியை அமைதியாக ஏற்றுக்கொண்டு, மனதை சற்றே அடக்கிக் கொண்டேன்.
இரண்டாவது கத்தியை பிடுங்கிப் பார்த்தேன். ஆபத்திலும் அவசரத்திலும் நான் உதவி செய்தவர்களின் பெயர்கள் அதில் தெளிவாக எழுதப்பட்டிருந்தது. இது எனக்கு முற்றிலும் எதிர்பாராத அதிர்ச்சியாக இருந்தது. இருப்பினும் என் இதயத் துடிப்பை கட்டுப்படுத்தி, என் உணர்ச்சிகளை சமநிலைப்படுத்த முயன்றேன்.
மூன்றாவது கத்தியை பிடுங்கிப் பார்த்தேன். நான் உயர்த்தி வைத்தவர்களும், நேசித்து மதித்தவர்களும் சிரித்த முகத்தோடு என்னை நோக்கிக் கொண்டிருந்தனர். அந்தக் காட்சி என் உள்ளத்தை நொறுக்கிவிட்டது. இதயம் உடைந்ததுபோல ஒரு ஆழ்ந்த வலி என்னுள் எழுந்தது.
இறைமக்களே, வாழ்க்கையில் நம்மை காயப்படுத்தும் இத்தகைய மூன்று வகையான அனுபவங்கள் நிச்சயமாக வரும். நட்பின் பெயரில் வரும் துரோகம், நம் நன்மையை மறக்கும் மனிதர்கள், நாம் உயர்த்தியவர்களிடமிருந்து வரும் ஏமாற்றம் இவையனைத்தும் மனதை ஆழமாக காயப்படுத்தக் கூடியவை. ஆகையால் இத்தகைய மனக்காயங்களைப் பற்றி விழிப்புணர்வும் எச்சரிக்கையும் நமக்குத் தேவை.
சொல்லாலும் செயலாலும் காயப்படுத்தப்பட்டவர்கள், தங்கள் மனக்காயங்களை மறைத்து வைக்காமல் அதை உணர்ந்து கொள்ள வேண்டும். அந்த காயங்களுக்கு காரணமான சூழ்நிலைகளையும், அதன் விளைவுகளையும் புரிந்து கொள்ள வேண்டும். அதிலிருந்து வெளியேறுவதற்கான வழிகளைத் தேட வேண்டும். தேவனுடைய உதவியோடும், இறைவேதத்தின் ஆலோசனைகளோடும் அந்த மனக் காயங்களைச் சுகப்படுத்திக் கொள்ளுதல் அவசியமாகிறது.
பலரால் ஏமாற்றப்பட்டும், புறக்கணிக்கப்பட்டும், அவமானப் படுத்தப்பட்டும், துரோகம் அனுபவித்தும், இழப்புகளாலும் தோல்விகளாலும் மனம் உடைந்திருக்கும் இறைமக்களே, இறைவேதம் நமக்கு ஒரு ஆறுதலான வாக்குறுதியைக் கொடுக்கிறது: “நான் உனக்கு ஆரோக்கியம் வரப்பண்ணி, உன் காயங்களை ஆற்றுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்” (எரேமியா 30:17).
இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை இதற்கு மிகப் பெரிய எடுத்துக்காட்டாகும். அவரோடு நெருக்கமாக இருந்த பன்னிரண்டு சீடர்களில் சீமோன் பேதுருவும் யூதாஸ் காரியோத்தும் முக்கியமானவர்கள். அவர்கள் இயேசு செய்த அற்புதங்களைக் கண்ணாற கண்டவர்கள். அவரோடு உணவு உண்டவர்கள். ஆனால் ஒரு தருணத்தில், யூதாஸ் தனது சுயலாபத்திற்காக இயேசுவைத் துரோகம் செய்தான். பேதுரு பயந்த காரணத்தால் அவரை மறுத்தான்.
ஆனால் அந்த தருணங்களில் இயேசுவின் மனப்பாங்கை கவனித்துப் பாருங்கள். தன்னை விற்றுக் கொடுத்த யூதாஸை அவர் “சிநேகிதனே” என்று அழைத்தார். தன்னை மறுத்த பேதுரு மனந்திரும்பி வந்தபோது, அவரை நிராகரிக்காமல் மீண்டும் ஏற்றுக்கொண்டார். இது தான் ஒரு பக்குவமான மனத்தின் அடையாளம்.
வாழ்க்கை சாலையைப் போன்றது, அதில் பள்ளமும் மேடும் இருக்கும். அதுபோலவே நம் வாழ்க்கையிலும் உயர்வும் தாழ்வும், சந்தோஷமும் துக்கமும் மாறிமாறி வரும். இந்த எல்லா சூழ்நிலைகளிலும் நமது மனதை சமநிலையுடன் கையாள கற்றுக்கொள்ள வேண்டும்.
ஆகையால் இறைமக்களே, மனக்காயங்களை மனதில் வைத்துக்கொண்டு துன்பத்தில் மூழ்காதீர்கள். அவற்றை தேவனிடம் ஒப்படையுங்கள். அவர் மட்டுமே காயங்களை ஆற்றக்கூடியவர். விழிப்புணர்வோடும், ஆன்மீக ஞானத்தோடும், சமநிலையான மனநிலையோடும் வாழ்க்கையை முன்னெடுத்து செல்லுங்கள். அப்போது காயங்கள் கூட உங்களை பலப்படுத்தும் அனுபவங்களாக மாறும்.
– போதகர். பெ. பெவிஸ்டன்