ஒரு ஈ, ஒரு எருதின் கொம்பில் நெடுநேரம் உட்கார் ந்திருந்தது. உயர்ந்த இடத்தில் அமர்ந்திருப்பதால், தானே மிக உயர்ந்தவள் என்ற எண்ணத்தில் அது உலகத்தை ரசித்து கொண்டிருந்தது. தன்னுடைய சிறிய இருப்பை மறந்து, தன்னைப் பெரியதாகக் கருதிக்கொண்ட அந்த ஈ, ஒரு கட்டத்தில் அந்த இடத்தை விட்டு பறந்து செல்லத் தயாரானது.
புறப்படும் முன், அது எருதை நோக்கி பேசத் தொடங்கியது: “எருதே, நான் இப்போது பறந்து செல்லப் போகிறேன். அதனால் உனக்கு எந்த வருத்தமும் இல்லை தானே?” என்று கேட்டது. அந்தக் கேள்வியில், தன்னுடைய இருப்பு எருதிற்கு முக்கியமானது என்ற அகங்காரம் வெளிப்பட்டது.
அதை கேட்ட எருது மெதுவாகச் சிரித்தது. தனது கண்களை மேலே தூக்கி, ஈயைப் பார்த்து அமைதியாகப் பதிலளித்தது: “ஓ சிறிய ஈயே, நீ இருந்தாலும் இல்லையென் றாலும் எனக்கு ஒன்றும் மாறாது. நீ என் கொம்பில் வந்து உட்கார்ந்ததே எனக்குத் தெரியவில்லை. அப்படியிருக்க, நீ போகிறாயா என்று என்னைக் கேட்கிறாயே!” என்றது.
இந்த வார்த்தைகள் ஈயின் மனதைத் துளைத்தன. அது தன் சிறுமையை உணர்ந்தது. வெட்கத்தில் அதன் முகம் சிவந்து, எதுவும் பேசாமல் அங்கிருந்து பறந்து சென்றது.
இறைமக்களே, இந்தச் சிறிய கதையில் ஒரு பெரிய உண்மை மறைந்துள்ளது. உலகத்தில் பலர் அந்த ஈயைப் போலவே வாழ்கின்றனர். தங்களுடைய நிலையை உணராமல், தாங்கள் மிகப் பெரியவர்கள் என்ற எண்ணத்தில் வாழ்கின்றனர். தங்கள் சுற்றத்தாரும் உலகமும் தங்களை மிக உயரமாக மதிக்கின்றன என்று தவறாக எண்ணிக்கொள்கின்றனர்.
ஆனால் உண்மை என்னவென்றால், நாம் எண்ணும் அளவிற்கு உலகம் நம்மைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. நாம் இல்லாதாலும் உலகம் தனது பயணத்தைத் தொடர்கிறது. இதை உணராமல், நாம் கட்டிக்கொள்ளும் பெருமை உண்மையில் ஒரு மாயை மட்டுமே.
இன்றைய காலத்தில், தன்னைத் தானே உயர்த்திக் காட்டிக்கொள்ளும் மனப்பான்மை அதிகமாக காணப்படுகிறது. சமூகத்தில் சில சாதனைகள் செய்தவுடன், அல்லது சிறிது புகழ் கிடைத்தவுடன், மனிதன் தன்னை மற்றவர்களை விட உயர்ந்தவன் என்று எண்ணத் தொடங்குகிறான். தனது திறமைகளைப் பற்றி பேசுவதற்குப் பதிலாக, தன்னைப் பற்றி பெருமையாகப் பேசுகிறான்.
இத்தகைய பெருமை, மனிதனை மெதுவாக வீழ்ச்சிக்கு கொண்டு செல்கிறது. ஏனெனில், பெருமை உள்ள இடத்தில் பணிவு இருக்காது; பணிவு இல்லாத இடத்தில் இறைவனுடைய கிருபை நிலைத்திருக்காது.
இதனால்தான் இறைவேதம் நம்மை எச்சரிக்கிறது: “உங்களில் எவனானாலும் தன்னைக்குறித்து எண்ணவேண் டியதற்கு மிஞ்சி எண்ணாமல், தெளிந்த எண்ணமுள்ளவனாய் எண்ண வேண்டும்” (ரோமர் 12:3) என்று கூறுகிறது. மேலும், “உன்னை அதிக ஞானியுமாக்காதே” (பிரசங்கி 7:16) என்றும் அறிவுறுத்துகிறது.
பரிசுத்த வேதத்தில் வாழ்ந்த மகத்தானவர்கள் கூட தங்களைத் தாழ்த்திக்கொண்டதை நாம் காண்கிறோம். இஸ்ரவேலின் அரசனாகிய தாவீது தன்னை “தெள்ளுப்பூச்சி” என்று தாழ்த்திக் கொண்டார் (1 சாமு. 26:20). விசுவாசிகளின் தகப்பனாகிய ஆபிரகாம் தன்னை “தூளும் சாம்பலுமானவன்” என்று கூறினார் (ஆதி. 18:27). செல்வமும் செழிப்பும் பெற்றிருந்த யோபு கூட “நான் நீசன்” என்று தன்னை உணர்ந்தார் (யோபு 40:4).
இந்த மகத்தானவர்கள் தங்களை இவ்வாறு தாழ்த்திக் கொண்டபோது, இன்று நாம் எவ்வளவு பெரியவர்களாக நினைத்துக்கொள்வது சரியானதா என்பதை சிந்திக்க வேண்டும்.
இறைவன் நம்மை மண்ணிலிருந்து உருவாக்கினார். ஆகவே நாம் யார் என்பதை மறந்துவிடக்கூடாது. “நாம் மண்ணென்று தேவன் நினைவு கூருகின்றார்” (சங்கீதம் 103:14) என்ற உண்மை எப்போதும் நம் மனதில் நிலைத்திருக்க வேண்டும். மனிதன் எவ்வளவு உயர்ந்த நிலைக்கு சென்றாலும், அவன் ஆரம்பமும் முடிவும் மண்ணே. இதை உணர்ந்தால், பெருமைக்கு இடமே இருக்காது.
இறைவேதம் மேலும் ஒரு முக்கியமான உண்மையை கூறுகிறது: “தன்னைத்தான் உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப் படுவான்; தன்னைத்தான் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்” (லூக்கா 14:11).
இதுவே வாழ்க்கையின் நிலையான தத்துவம். மனிதன் தன்னை உயர்த்திக்கொள்ள முயன்றால், இறுதியில் அவன் தாழ்த்தப்படுவான். ஆனால் தன்னைத் தாழ்த்திக்கொண்டு பணிவுடன் நடப்பவன், இறைவனால் உயர்த்தப்படுவான்.
இறைமக்களே, நாம் எந்த உயரத்தில் இருந்தாலும், நம்முடைய நிலையை உணர்ந்து பணிவுடன் நடப்போம். வீண்பெருமையைத் துறந்து, நமக்கு கொடுக்கப்பட்ட கிருபைக்கு நன்றி கூறுவோம். பெருமை நம்மை வெறுமையாக்கும்; பணிவு நம்மை உயர்த்தும். எனவே, பெருமையின் மாயையை விட்டு, பணிவின் பாதையில் நடந்து, இறைவனுடைய கிருபையிலும் ஆசீர்வாதத்திலும் வளர்ந்து வாழ்வோமாக.
– போதகர். பெ. பெவிஸ்டன்