ஒரு நாள், ஒரு கார் டிரைவர் வழக்கம்போல் தன் வண்டியை எடுத்துக் கொண்டு வேலைக்காக கிளம்பினார். எல்லாம் சீராகச் சென்றுகொண்டிருந்தபோது, சிறிது தூரம் சென்றவுடன் திடீரென கார் டயர் பஞ்சர் ஆனது. அவர் வண்டியை ஓரமாக நிறுத்தி இறங்கினார்.
அவர் இருந்த இடம் ஒரு மனநல மருத்துவமனைக்கு அருகில் இருந்தது. சுற்றிலும் பார்த்தார். எங்காவது ஒரு மெக்கானிக் கடை இருக்கிறதா என்று தேடினார். ஆனால் அருகில் எந்த உதவியும் கிடைக்கவில்லை. “இதை நான் தான் சரி செய்து கொள்ள வேண்டும்” என்று முடிவு செய்து, ஸ்டெப்னி டயரை மாற்றத் தொடங்கினார். அவர் கவனமாக நான்கு போல்ட்டுகளையும் கழற்றி, அவற்றை ஓரமாக வைத்தார். பின்னர் ஸ்டெப்னி டயரை எடுத்து வரச் சென்றார். அந்த நேரத்தில் ஒரு தவறு நடந்தது. அவர் திரும்பி வரும்போது கால் இடறி, அந்த நான்கு போல்ட்டுகளும் அருகில் இருந்த கால்வாயில் விழுந்து விட்டன. இப்போது டிரைவர் பெரும் சிக்கலில் சிக்கினார். “இப்போ என்ன செய்வது?” என்று கவலையுடன் யோசிக்கத் தொடங்கினார். அந்த போல்ட்டுகளை எடுக்க முடியாத நிலை. அவற்றின்றி டயரை பொருத்த முடியாது. அவர் மனதில் குழப்பமும் பதற்றமும் அதிகரித்தது.
அந்த நேரத்தில், அங்கிருந்த ஒருவர் அருகே வந்து மெதுவாகக் கேட்டார்: “என்ன ஐயா, ஏதாவது பிரச்சனை போலிருக்கே?” அந்த மனிதனை பார்த்த டிரைவர், அவர் மனநல மருத்துவமனையில் இருப்பவராக இருக்கலாம் என்று நினைத்தார். “இவரை சாக்கடையில் இறக்கி போல்ட்டுகளை எடுக்க சொல்லலாம்” என்று உள்ளுக்குள் எண்ணிக்கொண்டார். ஆனால் அவர் நடந்ததை முழுவதும் அவரிடம் விளக்கினார்.
அதை கவனமாகக் கேட்ட அந்த நபர், சற்றும் தயங்காமல் ஒரு தீர்வைச் சொன்னார்: “மற்ற மூன்று சக்கரங்களில் இருந்து தலா ஒரு போல்ட்டை கழற்றுங்கள். அந்த மூன்று போல்ட்டுகளை இந்த சக்கரத்தில் மாட்டுங்கள். அப்படியே மெதுவாக அருகிலுள்ள மெக்கானிக் கடைக்கு போய், புதிய போல்ட்டுகளை வாங்கி எல்லா சக்கரங்களிலும் சரியாக பொருத்திக் கொள்ளலாம்.” இந்த யோசனை டிரைவருக்கு மிகப் பெரிய ஆச்சரியத்தை அளித்தது.
அவர் இதுவரை யோசிக்காத ஒரு எளிய, புத்திசாலித் தனமான தீர்வு அது. அவர் அந்த மனிதனை பார்த்து வியப்புடன் கேட்டார்: “இவ்வளவு தெளிவாக யோசிக்கிறீர்கள் அப்படியிருக்க, நீங்கள் எப்படி இந்த மனநல மருத்துவ மனையில் இருக்கிறீர்கள்?” அதற்கு அந்த நபர் அமைதியாகச் சிரித்தபடி கூறினார்: “இந்த மருத்துவமனையில் இருப்பவர்கள் எல்லாரும் முட்டாள்கள் அல்ல; வெளியில் சுத்திக் கொண்டிருப்பவர்கள் எல்லாரும் புத்திசாலிகளும் அல்ல.” இந்த ஒரு பதில் டிரைவரின் மனதை ஆழமாகத் தொட்டது. அவர் உணர்ந்தார். நாம் மனிதர்களை அவர்கள் இருக்கும் இடம், தோற்றம் அல்லது சூழ்நிலை வைத்து மதிப்பிடுவது தவறு என்பதை.
இறைமக்களே, இந்த நிகழ்வு நமக்கு ஒரு முக்கியமான பாடத்தை கற்பிக்கிறது. நாம் பல நேரங்களில், ஒருவரின் வெளிப்புற தோற்றத்தைப் பார்த்து அவரைப் பற்றி தீர்ப்பு கூறிவிடுகிறோம். அவர் எப்படி உடை அணிந்துள்ளார், அவர் எங்கு இருக்கிறார், அவர் எந்த நிலைமையில் இருக்கிறார் என்பதையே வைத்து அவருடைய மதிப்பை கணக்கிடுகிறோம். ஆனால் உண்மையில், மனிதனின் அறிவும், ஞானமும், திறமையும் வெளிப்புறத்தில் அல்ல; உள்ளத்தில் இருக்கிறது.
இதனால்தான் இறைவேதம் நம்மை எச்சரிக்கிறது: “தோற்றத்தின்படி தீர்ப்புச்செய்யாமல், நீதியின்படி தீர்ப்புச் செய்யுங்கள்” (யோவான் 7:24). ஒருவரை முழுமையாக அறியாமல் அவரைப் பற்றி கருத்து கூறுவது அநியாயம். நாம் காண்பது வெளிப்புறம் மட்டும்; ஆனால் இறைவன் காண்பது உள்ளம். எனவே, நாம் மனிதர்களை மதிப்பிடும் போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
இறைமக்களே, ஒவ்வொருவரிடமும் ஏதோ ஒரு திறமை உள்ளது. சில நேரங்களில், நாம் மதிக்காதவர்க ளிடமிருந்தே வாழ்க்கையை மாற்றும் அறிவும் ஆலோசனையும் கிடைக்கலாம். ஆகவே, எவரையும் தாழ்வாக எண்ணாமல், ஒவ்வொருவரையும் மரியாதையுடன் அணுகுவோம். தோற்ற த்தை அல்ல, உண்மையைப் பார்க்க கற்றுக் கொள்வோம். அப்போது தான் நமது சிந்தனை தெளிவடையும்; நமது வாழ்க்கை உயர்வடையும்.
– போதகர். பெ. பெவிஸ்டன்