ஒரு குடும்பத்தில், தகப்பனாரின் நூறாவது பிறந்தநாள் நெருங்கி வந்தது. அவருடைய ஆறு பிள்ளைகளும் தங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து, இந்த விழாவை மிகவும் விமர்சை யாகக் கொண்டாட முடிவு செய்தனர். வாழ்க்கையில் அரிதாக கிடைக்கும் இந்த தருணத்தை சிறப்பாக மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் அவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் செயல்பட்டனர்.
பிறந்தநாளுக்கு இரு நாட்களுக்கு முன்பே அனைவரும் தங்கள் தகப்பனின் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். இந்த விழாவை தகப்பனுக்கு ஒரு இனிய அதிர்ச்சியாக மாற்ற வேண்டும் என்பதால், அவருக்குத் தெரியாமல் அனைத்து ஏற்பாடுகளையும் ரகசியமாகச் செய்யத் தொடங்கினர். வீடு முழுவதும் பரபரப்பாக இருந்தது; ஒவ்வொருவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வேலைகளில் முழுமையாக மூழ்கியிருந்தனர்.
தந்தை, தன் பிள்ளைகளையும் பேரப்பிள்ளைகளையும் பார்த்து மனமகிழ்ந்தார். ஒவ்வொருவரையும் அன்புடன் அழைத்து பேச முயன்றார். நீண்ட நாட்களுக்குப் பிறகு குடும்பம் ஒன்று கூடிவிட்டது என்ற சந்தோஷம் அவரை நிரப்பியது. ஆனால், பிள்ளைகளோ விழா ஏற்பாடுகளில் மிகவும் பிஸியாக இருந்தனர். “பிறகு பேசலாம் அப்பா” என்று சொல்லி அவர்கள் தங்கள் வேலையில் மூழ்கினர். தகப்பனின் இதயத்தில் சிறிய வருத்தம் எழுந்தாலும், அதை வெளிப்படுத்தாமல் அமைதியாக இருந்தார்.
வீடு முழுவதும் அலங்கரிக்கப்பட்டது. சுவர்கள் வெள்ளையடிக்கப்பட்டன. வண்ண விளக்குகள் மின்னின. ஊர் முழுவதும் டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டன. விருந்துக்கு பெரிய அளவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. சமையல் காரர்களுக்கு அதிக தொகை வழங்கப்பட்டது. மொத்தத்தில் அந்த வீடு ஒரு திருவிழா மண்டபமாக மாறியது.
இரவு நேரம் ஆகி வந்தது. இன்னும் சில மணி நேரங்களில் பிறந்தநாள் தொடங்கப்போகிறது. தகப்பன் இருந்த அறையை அலங்கரிக்க வேண்டியது மட்டும் மீதமிருந்தது. அப்பா கட்டிலில் அமைதியாகத் தூங்கிக் கொண்டிருந்தார். அவரை எழுப்பினால் தொந்தரவு ஆகிவிடும் என்று நினைத்த பிள்ளைகள், அவரை கட்டிலோடு சேர்த்து வீட்டிற்கு வெளியே கொண்டு சென்று வைத்துவிட்டு, அறைக்குள் அலங்கார வேலைகளை விரைவாக முடித்தனர்.
நேரம் நள்ளிரவை அணைந்தது. அனைத்து ஏற்பாடு களும் முடிந்தது. அனைவரும் மிகுந்த உற்சாகத்துடன் தங்கள் திட்டத்தை நிறைவேற்றத் தயாரானார்கள். தகப்பனை மீண்டும் அறைக்குள் கொண்டு வந்து, சரியாக 12 மணிக்கு எழுப்பி வாழ்த்து சொல்ல வேண்டும் என்று திட்டமிட்டனர்.
நள்ளிரவு மணி அடித்தது. அனைவரும் சந்தோஷக் குரலில் தகப்பனை எழுப்ப முயன்றனர். ஆனால், அவருக்கு எந்த இயக்கமும் இல்லை. பதற்றமடைந்த அவர்கள் உடனே மருத்துவரை அழைத்தனர். மருத்துவர் பரிசோதித்து, கடும் குளிரால் அவருடைய உயிர் பிரிந்துவிட்டது என்று தெரிவித்தார்.
அந்த மகிழ்ச்சியான வீடு, கணநேரத்தில் துயர வீடாக மாறியது. கண்ணீரில் தத்தளித்த குடும்பத்தினர், தகப்பனின் படுக்கையின் அருகில் இருந்த ஒரு கடிதத்தை கண்டனர். அதில், “என் பிள்ளைகளும் அவர்களது பிள்ளைகளும் தான் என் உயிர். அவர்களுடன் நேரம் செலவிட விரும்புகிறேன். ஆனால் அவர்கள் என்னுடன் நேரம் செலவிடாமல், எனக்காகவே வேலை செய்கிறார்கள்” என்று எழுதியிருந்தது.
அந்த வார்த்தைகள் அவர்களின் இதயத்தை நொறுக்கின. “நாம் தகப்பனை ஒதுக்கி வைத்து, அவரின் பிறந்தநாளை மட்டும் கொண்டாடினோம்; ஆனால் அவரையே இழந்துவிட்டோம்” என்ற உணர்வு அவர்களை மிகுந்த வேதனையில் ஆழ்த்தியது.
இறைமக்களே, இந்த நிகழ்வு நமக்கு ஒரு ஆழமான உண்மையை எடுத்துரைக்கிறது. பல நேரங்களில், நாம் மனிதர்களை விட அவர்களுக்காக செய்யும் நிகழ்ச்சிகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கிறோம். அன்பை வெளிப்படுத்த வேண்டிய இடத்தில், ஆடம்பரத்தை வெளிப்படுத்துகிறோம். உறவை வளர்க்க வேண்டிய இடத்தில், நிகழ்ச்சிகளை பெரிதாக்குகிறோம்.
இதேநிலை கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களிலும் காணப்படுகிறது. நாம் வீடுகளை அலங்கரிக்கிறோம், புதிய உடைகள் அணிகிறோம், விருந்து வைத்து கொண்டாடுகிறோம். ஆனால், இந்த விழாவின் மையமாக இருக்க வேண்டிய இயேசு கிறிஸ்துவுடன் நாம் உண்மையில் நேரம் செலவிடுகிறோமா என்பதை சிந்திக்க வேண்டும். தகப்பனுக்கு தேவையானது விழா அல்ல; பிள்ளைகளின் நேரமும் அன்பும் தான். அதுபோல, கிறிஸ்துவுக்குத் தேவையானது வெளிப்புற கொண்டாட்டம் அல்ல; நமது இருதயமே தேவை.
எனவே, இறைமக்களே, கிறிஸ்துவின் பெயரில் கொண்டாட்டங்களைச் செய்வதோடு மட்டுமல்லாமல், கிறிஸ்துவையே நமது வாழ்வில் கொண்டாடுவோம். அவருடன் நேரம் செலவிடுவோம். அவரை நம் வாழ்வின் மையமாக்குவோம். அப்போதுதான் நமது வாழ்க்கை உண்மையான மகிழ்ச்சியாலும் நிறைவாலும் நிரம்பும்.
– போதகர். பெ. பெவிஸ்டன்