80 வயதான ஒரு முதியவர், தனது வீட்டில் சாய்வு நாற்காலியில் அமைதியாக அமர்ந்திருந்தார். அவருடன், நல்ல கல்வி கற்ற 45 வயது மகனும் அருகில் உட்கார்ந்திருந்தான். அப்போது, ஒரு காக்கை வந்து ஜன்னல் கம்பியில் அமர்ந்தது.
அதை பார்த்த தந்தை மெதுவாக மகனை நோக்கி, “இது என்ன?” என்று கேட்டார். மகன் அமைதியாக, “இது காக்கை” என்று பதிலளித்தான். சில நிமிடங்கள் கழித்து, தந்தை மீண்டும் அதே கேள்வியை கேட்டார்: “இது என்ன?” இம்முறை மகன் சற்று எரிச்சலுடன், “இப்போதுதானே காக்கை என்று சொன்னேன்” என்றான்.
மூன்றாவது முறையாகவும், நான்காவது முறையாகவும் தந்தை அதே கேள்வியை கேட்டபோது, மகன் கோபம் அடைந்து, “எத்தனை முறை அதே கேள்விக்கு பதில் சொல்லணும்?” என்று சினந்தான்.
சில நிமிடங்கள் கழித்து, அந்த முதிய தந்தை மெதுவாக எழுந்து தனது அறைக்குச் சென்றார். அங்கு இருந்த ஒரு பழைய நாட்குறிப்பை எடுத்துக்கொண்டு வந்தார். அது, தனது மகன் பிறந்த நாளிலிருந்து எழுதப்பட்ட நினைவுக் குறிப்புகள் கொண்ட ஒரு புத்தகம். அவர் ஒரு பக்கத்தைத் திறந்து மகனிடம் படிக்கச் சொன்னார்.
அதில் எழுதப்பட்டிருந்தது: “இன்று என் மூன்று வயது மகன் என்னுடன் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு, ஜன்னலில் இருந்த காக்கையை காண்பித்து 23 முறை ‘இது என்ன?’ என்று கேட்டான். ஒவ்வொரு முறையும் நான் அவனை அன்போடு அணைத்துக்கொண்டு, பொறுமையுடன் ‘இது காக்கை’ என்று சொல்லிக்கொண்டிருந்தேன்.”
அதை வாசித்த மகனின் மனம் தளர்ந்தது. அவன் கண்களில் கண்ணீர் தோன்றியது. அப்போது தந்தை அமைதியாகச் சொன்னார்: “நான் உனக்கு 23 முறை பதில் சொல்லும்போது கோபப்படவில்லை. ஆனால் நீ எனக்கு நான்கு முறை கேட்டதற்கே கோபப்படுகிறாய்.” இந்தச் சிறிய சம்பவம் ஒரு பெரிய உண்மையை நமக்கு உணர்த்துகிறது. நாம் சிறு குழந்தைகளாக இருந்தபோது, நம்முடைய பெற்றோர் எவ்வளவு பொறுமையுடன், அன்புடன், தன்னலமின்றி நம்மை வளர்த்தார்கள்!
நாம் பேச கற்றுக்கொண்டதும், நடக்க கற்றுக் கொண்டதும், உலகத்தை அறிந்ததும் அவர்களின் அக்கறை, தியாகம், அன்பு காரணமாகத்தான். ஆனால், அவர்கள் வயதாகும் போது, நாம் பல நேரங்களில் அவர்களைப் புரிந்துகொள்ளாமல், எரிச்சலுடன் பேசுகிறோம். அவர்களை ஒரு சுமையாகப் பார்க்கிறோம். அவர்களின் மெதுவான செயல்களையும், மறதி தன்மையையும் நாம் சகிக்க முடியாமல் போகிறது.
இறைமக்களே, இது நம் வாழ்க்கையில் சிந்திக்க வேண்டிய ஒரு முக்கியமான பகுதி. பெற்றோர் என்பது ஒரு உறவு மட்டும் அல்ல; அது ஒரு ஆசீர்வாதம். அவர்களை மதிப்பதும், அவர்களுடன் நேரம் செலவிடுவதும், அவர்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பதும் நம் கடமையாகும்.
“உன் தகப்பனையும் உன் தாயையும்
கனம்பண்ணுவாயாக” (உபாகமம் 5:16)
அன்பானவர்களே, பெற்றோர் நம்மை சிறு வயதில் தாங்கியதுபோல், இன்று நாம் அவர்களை அன்போடு தாங்குவோம். அவர்கள் பேசும்போது பொறுமையுடன் கேட்போம். அவர்களை மகிழ்ச்சியாக வைத்திருப்போம்.
ஏனெனில், ஒருநாள் நாம் தேடும்போது அவர்களின் குரலும், அன்பும், இருப்பும் நமக்கு கிடைக்காமல் போய்விடலாம். அவர்களை உயிரோடு இருக்கும்போதே மதிப்போம். அவர்களுடன் இருக்கும் நேரத்தை ஆசீர்வாதமாக எண்ணிப் பாதுகாப்போம்.
– போதகர். பெ. பெவிஸ்டன்