ஒரு நாள் மாலை நேரத்தில், அரியணையில் அமைதி யாக அமர்ந்திருந்த ராஜாவிடம் ஒரு மந்திரி வந்து வணங்கி, “மகிமைமிகு ராஜா அவர்களே, இந்த மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஐந்து நாட்கள் விடுமுறை தரும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்” என்றார். அதை கேட்ட ராஜா சிரித்துக் கொண்டு, “ஐந்து நாள் அல்ல, பத்து நாள் கூட உனக்கு விடுமுறை தருகிறேன். ஆனால் நான் கேட்கும் ஒரு கேள்விக்கு சரியான பதில் சொல்ல வேண்டும்” என்றார்.
அவர் கேட்ட கேள்வி மிகவும் ஆழமானது: “இயேசு கிறிஸ்து கடவுள் தானே? அப்படியிருக்க, ஏன் அவர் தானே மனிதராக வந்து பாவங்களுக்காக மரிக்க வேண்டும்? வேறு யாரையாவது அனுப்பி வைத்திருக்க முடியாதா? ஒரு ராஜா தன் நிலையை விட்டு இறங்காமல், ஒரு பிரதிநிதியை அனுப்புவதைப் போல கடவுளும் செய்யலாம் அல்லவா?” இந்த கேள்விக்கு மறுநாள் பதில் கூறுவதாக மந்திரி வாக்கு கொடுத்தார்.
அடுத்த நாள் அதிகாலை, சூரியன் உதிக்கும் முன்பாக, ராஜா வழக்கம்போல் கடற்கரைக்கு குதிரையில் சென்றார். அவருக்கு பின்னால் பாதுகாப்புக்காக பல வீரர்களும் வந்து கொண்டிருந்தனர். அப்போது ராஜா கடற்கரையை அடைந்த போது, அங்கு ஒரு சிறிய படகில் மந்திரி ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவருடைய கையில் ஒரு குழந்தையும் இருந்தது. அந்தக் குழந்தை ராஜாவின் குழந்தையைப் போலவே இருந்தது. அதை பார்த்த ராஜா பதற்றத்துடன், “மந்திரியாரே! என்ன செய்கிறீர்கள்? அது என் குழந்தை அல்லவா? உடனே கரைக்கு வாருங்கள்!” என்று கூச்சலிட்டார்.
அந்த நேரத்தில், எதிர்பாராத விதமாக மந்திரியின் கையிலிருந்து அந்தக் குழந்தை கடலில் விழுந்தது. “ஐயோ!” என்று அலறிய ராஜா, ஒரு நொடியும் தாமதிக்காமல் தன் மேலிருந்த ஆடைகளை கழற்றி எறிந்து, குதிரையிலிருந்து இறங்கி, நேராக கடலுக்குள் பாய்ந்து, நீந்தி சென்று அந்தக் குழந்தையை காப்பாற்றினார். பின்னர் தான் அவர் உணர்ந்தார். அது உண்மையான குழந்தை அல்ல; ஒரு பொம்மை!
அவர் கோபத்திலும் குழப்பத்திலும், “மந்திரியாரே! ஏன் இப்படிச் செய்தீர்கள்?” என்று கேட்டார். அப்போது மந்திரி அமைதியாகப் பேசத்தொடங்கினார்: “மகிமைமிகு ராஜா அவர்களே, உங்கள் குழந்தை கடலில் விழுந்தபோது, நீங்கள் உங்கள் சேவகர்களில் ஒருவரையாவது அனுப்பியிருக்கலாம். நீங்கள் ஒரு பெரிய ராஜா. உங்கள் நிலையை விட்டு நீங்களே குதிப்பது அவசியமா?”
அதற்கு ராஜா உடனே பதிலளித்தார்: “அது என் குழந்தை அல்லவா? நான் எப்படி மற்றவர்களை நம்ப முடியும்? என் குழந்தையை காப்பாற்ற நான் தான் செல்ல வேண்டும்!” அந்தச் சொற்களை கேட்ட மந்திரி மெதுவாக சிரித்தார்: “அரசே, இதுதான் உங்கள் கேள்விக்கான பதில்.
நாம் கடவுளின் பிள்ளைகள். நாம் பாவத்தின் ஆழத்தில் விழுந்திருந்தோம். நம்மை காப்பாற்ற கடவுள் வேறு ஒருவரை அனுப்பவில்லை. அவர் தாமே மனிதராக வந்து, நம்மை மீட்டார். அதுதான் இயேசு கிறிஸ்துவின் அவதாரம்.”
இந்த உண்மையை கேட்ட ராஜாவின் கண்களில் கண்ணீர் வழிந்தது. “நான் கேட்ட கேள்விக்கு உண்மையான பதிலை நீ அளித்தாய்” என்று கூறி, மந்திரியை அணைத்தார்.
அவர் மகிழ்ச்சியுடன், “இந்த கிறிஸ்துமஸ் விழாவை நமது நாடு முழுவதும் கொண்டாடட்டும்” என்று உத்தரவிட்டார்.
இறைமக்களே, இந்தக் கதை நமக்கு ஒரு ஆழமான உண்மையை உணர்த்துகிறது. கடவுளின் அன்பு வெறும் வார்த்தைகளில் அல்ல; அது செயலால் வெளிப்பட்டது. அதனால் தான் இறைவேதம் கூறுகிறது: “அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும் தம்மைத்தாமே வெறுமையாக்கி, மனுஷர் சாயலானார்” (பிலிப்பியர் 2:6-7)
அன்பானவர்களே, இயேசு கிறிஸ்துவின் பிறப்பு ஒரு சாதாரண நிகழ்வு அல்ல. அது கடவுளின் அளவற்ற அன்பின் வெளிப்பாடு. “அவர் நம்மைத் தேடி வந்தார், நம்மை மீட்க தம்மையே தந்தார்” எனவே, கிறிஸ்துமஸை வெளிப்புற கொண்டாட்டமாக அல்லாமல், அவருடைய அன்பையும் தியாகத்தையும் நினைவுகூரும் நாளாகக் கொண்டாடுவோம். அவரை நம் இதயத்தில் ஏற்றுக்கொள்வோம். அவருடைய அன்பில் வாழ்வோம்.
– போதகர். பெ. பெவிஸ்டன்