ஒரு நாள் இரவு, ஒரு மன்னனின் வாழ்க்கையில் எதிர்பாராத ஒரு சம்பவம் நடந்தது. அவன் அமைதியாக உறங்கிக் கொண்டிருந்த நேரத்தில், ஒரு சிறிய பூச்சி அவன் காதிற்குள் நுழைந்தது. அது ஒரு சாதாரண விஷயமாகத் தோன்றினாலும், மன்னனுக்கு அது மிகுந்த அச்சத்தையும் வேதனையையும் உண்டாக்கியது. அந்த ஒரு சிறிய சம்பவம், அவன் மனதில் பெரிய கலக்கமாக மாறிவிட்டது.
அடுத்த நாள் முதல், மன்னன் நிம்மதியை இழந்தான். காதுக்குள் ஏதோ அசைவது போல அவனுக்கு உணர்ந்தது. அந்த உணர்வு உண்மையா, இல்லையா என்பதைக் கூட அவன் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் அவன் மனதில் அது ஒரு பெரிய பிரச்சனையாக பதிந்துவிட்டது.
அரண்மனை வைத்தியர்கள் உடனே அழைக்கப்பட்ட னர். அவர்கள் பல்வேறு முறைகளில் பரிசோதனை செய்தனர். எண்ணெய் ஊற்றினர், மருந்துகள் போட்டனர், பலவிதமான கருவிகளைப் பயன்படுத்தி அந்தப் பூச்சியை வெளியே எடுக்க முயன்றனர். ஆனால் எந்த முயற்சியும் பலிக்கவில்லை.
நாள்கள் கடந்து கொண்டே இருந்தன. மன்னனின் நிலை மோசமடைந்தது. அவனால் சாப்பிட முடியவில்லை. நிம்மதியாக உறங்க முடியவில்லை. உடல் மெலிந்தது. மனம் பதட்டமடைந்தது. அவன் எப்போதும் பயத்தில் வாழத் தொடங்கினான். “இந்தப் பூச்சி என்னை கொன்றுவிடுமோ?” என்ற எண்ணம் அவனை வாட்டிக் கொண்டே இருந்தது. இந்த பிரச்சனையை தீர்க்க யாராவது முன்வந்தால், அவர்களுக்கு பெரிய பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. பல நாடுகளிலிருந்து புகழ்பெற்ற வைத்தியர்கள் வந்தனர். அவர்கள் தங்கள் திறமையைப் பயன்படுத்தி முயன்றனர். ஆனால் யாராலும் மன்னனின் வேதனையை குறைக்க முடிய வில்லை.
ஒருநாள், தூர நாட்டிலிருந்து ஒரு ஞானி அரண்மனை க்கு வந்தார். அவர் அமைதியாக மன்னனின் காதை பரிசோதி த்தார். உடனே எந்தத் தீர்வையும் கூறவில்லை. சிறிது நேரம் சிந்தித்தபின், மெதுவாக பேசினார்: “மன்னா, இது சாதாரண பூச்சி அல்ல. மிகவும் அபூர்வமான ஒன்று. இதை நீக்க சாதாரண மருந்துகள் போதாது. ஒரு விசேஷ மூலிகை தேவை. அது இங்கிருந்து தொலைவில் உள்ள ஒரு காட்டில் மட்டுமே கிடைக்கும். என் சீடர்களை உடனே அனுப்புகிறேன். மூன்று நாட்களில் அவர்கள் அதை கொண்டு வருவார்கள்.”
இந்த வார்த்தைகள் மன்னனுக்கு ஒரு நம்பிக்கையை அளித்தது. “என் நோய்க்கு தீர்வு இருக்கிறது” என்ற எண்ணம் அவனுள் தோன்றியது. அந்த நம்பிக்கையே அவனுக்கு சிறிது நிம்மதியைத் தந்தது.
ஆச்சரியமாக, இரண்டு நாட்களிலேயே சீடர்கள் திரும்பி வந்தனர். மறுநாள் காலை, அந்த மூலிகைச் சாறு தயார் செய்து மன்னனின் காதில் ஊற்றப்பட்டது. சில நொடிகளில், ஒரு செத்த பூச்சி வெளியே விழுந்தது.
அதைப் பார்த்த மன்னன் மிகுந்த மகிழ்ச்சியடைந் தான். “இப்போது நான் குணமடைந்துவிட்டேன்!” என்ற நம்பிக் கை அவனை நிரப்பியது. பல நாட்களாக இருந்த வேதனை மறைந்தது. அவன் நிம்மதியாக உறங்கினான். சாப்பிட்டான். உடல் நலம் திரும்பியது.
ஞானிக்கும் சீடர்களுக்கும் பெருமையான பரிசுகள் வழங்கப்பட்டு, மரியாதையுடன் அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் நாட்டை விட்டு வெளியேறியபோது, சீடர்களில் ஒருவன் ஆச்சரியத்துடன் கேட்டான்: “குருவே, அந்த அபூர்வ மூலிகை என்ன?”
ஞானி சிரித்தபடி பதிலளித்தார்: “மன்னனின் காதில் பூச்சி இருந்தது உண்மை. ஆனால் அது ஏற்கனவே செத்து விட்டது. அவனை வதைத்தது பூச்சி அல்ல; அந்த நினைப்பு. பூச்சி இன்னும் உயிருடன் உள்ளதென்ற பயமே அவனை நோயாளியாக மாற்றியது.”
சீடன் மேலும் கேட்டான்: “அப்படியென்றால் உண்மை யைச் சொல்லியிருக்கலாமே?”
ஞானி கூறினார்: “அவன் மனநிலையை நீ புரிந்து கொள்ள வேண்டும். அவன் பிரச்சனை உண்மையில் உடலில் இல்லை; மனதில் இருந்தது. அதனால், அவன் நம்பும் விதத்தில் சிகிச்சை அளிக்க வேண்டியது அவசியம். நாங்கள் சாதாரண இலைகளைப் பயன்படுத்தினோம். மேலும் முன்கூட்டியே ஒரு செத்த பூச்சியை வைத்திருந்தேன். அதை காட்டியதும் அவன் நம்பினான். அவன் மனம் குணமடைந்தது. அதோடு அவன் உடலும் குணமடைந்தது.”
இறைமக்களே, இந்தச்சம்பவம் நமக்கு ஒரு ஆழமான உண்மையை உணர்த்துகிறது. இன்று மனிதனை பாதிக்கும் பல பிரச்சனைகள் உடலில் அல்ல; மனதில் இருக்கின்றன. நாம் அனுபவிக்கும் பல வேதனைகள் உண்மையானவை அல்ல; நமது சிந்தனைகளால் உருவாக்கப்பட்டவை.
நம்மில் பலர், சிறிய பிரச்சனைகளை பெரிதாக நினைத்து, அதை மனதில் வளர்த்து, நம்மையே துன்பப்படுத் திக் கொள்கிறோம். சில நேரங்களில், பிரச்சனை இல்லாவிட் டாலும், “ஏதோ பிரச்சனை இருக்கிறது” என்று எண்ணி பயப் படுகிறோம்.
உண்மையில், நம்மை பாதிப்பது பிரச்சனை அல்ல; அதை நாம் எப்படி பார்க்கிறோம் என்பதே முக்கியம். தவறா ன சிந்தனை, தேவையற்ற பயம், அளவுக்கு மீறிய கவலை. இவை எல்லாம் மனதில் “பூச்சி” போல இருந்து நம்மை வதைக்கின்றன. இதைத்தான் இறைவேதம் கூறுகிறது:
“தங்கள் சிந்தனைகளினாலே வீணரானார்கள்; அவர்களுடைய இருதயம் இருளடைந்தது” (ரோமர் 1:21)
ஆகையால், நம்முடைய சிந்தனைகளை கவனமாகக் காக்க வேண்டும். உண்மையையும் கற்பனையையும் பிரித்தறிய வேண்டும். தேவையற்ற பயங்களையும் கவலைகளையும் விட்டுவிட வேண்டும். வாழ்க்கையை கெடுப்பது வெளியில் இருக்கும் பிரச்சனைகள் அல்ல; உள்ளத்தில் இருக்கும் தவறான எண்ணங்களே.
ஆகையால், மனதில் இருக்கும் “பூச்சி”யை அகற்றுங்கள்; வாழ்க்கை வெளிச்சமாகும்.
– போதகர். பெ. பெவிஸ்டன்