ஒரு நாள், ஒரு மனிதன் கழுகின் ஒரு முட்டையை எடுத்துக் கொண்டு, அதை கோழி முட்டைகளுடன் சேர்த்து வைத்தான். காலம் கடந்தது. அந்த முட்டைகள் அனைத்தும் பொறிந்து, குஞ்சுகள் வெளியே வந்தன. அவற்றுடன் சேர்ந்து அந்தக் கழுகு குஞ்சும் வெளிவந்தது.
அந்தக் கழுகு குஞ்சு, கோழிக் குஞ்சுகளுடன் சேர்ந்து வளரத்தொடங்கியது. அவற்றைப் போலவே நடந்தது. அவற்றைப் போலவே தானியங்களையும் புழுக்களையும் தின்றது. தரையில் மட்டுமே சுற்றித் திரிந்தது. அது ஒருபோதும் மேலே பார்க்கவில்லை; பறக்க முயற்சிக்கவும் இல்லை. ஏனெனில் அது தன்னை ஒரு கோழி என்று நினைத்துக்கொண்டது.
ஒருநாள், வானத்தில் உயரமாக பறந்துகொண்டிருந்த ஒரு கழுகு, கீழே கோழிகளின் நடுவில் இருந்த அந்தக் கழுகு குஞ்சை கவனித்தது. தன் இனத்தைச் சேர்ந்த ஒன்று தன் உயரத்தை அறியாமல் கீழே உலாவுவதைப் பார்த்து அது ஆச்சரியமடைந்தது. அது உடனே கீழிறங்கி, அந்தக் குஞ்சை நோக்கி,
“நீ ஒரு கோழி அல்ல! நீ ஒரு கழுகு. வானத்தில் உயர்ந்து பறக்க வேண்டியவன். ஏன் இங்கே குப்பை மேட்டில் தானியங்களைத்தேடி அலையுகிறாய்? என்னோடு வா; உன்னை வானத்தில் பறக்க வைக்கிறேன்” என்று அழைத்தது. ஆனால் அந்தக் கழுகு குஞ்சு பயந்துபோய், “நான் ஒரு கோழிக் குஞ்சு தான். நீ என்னை ஏமாற்றி சாப்பிட முயற்சிக்கிறாய். உன் வார்த்தைகளை நான் நம்ப மாட்டேன்” என்று கூறியது. பின்னர் அது மீண்டும் கோழிக் குஞ்சுகளோடு சேர்ந்து ஓடி ஒளிந்தது. இவ்வாறு, அது தன் உண்மையான அடையாளத்தை ஏற்க மறுத்தது. உயரத்திற்கு அழைக்கப்பட்டும் தாழ்விலேயே தங்கி விட்டது.
இறைமக்களே, இந்தக் கதை நம் வாழ்க்கையை பிரதிபலிக்கிறது. தேவன் நம்மை உயர்ந்த நோக்கங்களுக் காக படைத்திருக்கிறார். ஆனால் நாம் வளர்ந்த சூழ்நிலைக ளை பார்த்து, “என் வாழ்க்கை இதுவரை தான்” என்று நாமே நமக்கு எல்லை விதித்துக் கொள்கிறோம்.
நாம் யார் என்பதை அறியாதவரை, நம் வலிமையை உணராதவரை, மற்றவர்களின் கருத்துகளுக்கும் சூழ்நிலைக ளுக்கும் அடிமையாகி விடுவோம். நாம் நம்மை குறைவாக எண்ணினால், உயர்ந்த வாழ்க்கையை அடைய முடியாது.
கிறிஸ்துவுக்குள் நாம் யார் என்பதை அறிதல் மிகவும் முக்கியமானது. உலகம் நம்மைப் பற்றி என்ன சொல்கிறது என்பதல்ல முக்கியம்; தேவன் நம்மைப் பற்றி என்ன சொல்கிறார் என்பதே உண்மை.
இறைவேதம் இவ்வாறு அறிவுறுத்துகிறது:
“பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள்” (கொலோ. 3:2)
ஆகையால், உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடா தீர். சூழ்நிலைகளால் கட்டுப்படாதீர். உங்கள் உண்மையான திறனை உணருங்கள். உயர்ந்த நோக்கத்துடன் வாழுங்கள்.
நீங்கள் கோழி அல்ல, பறக்க படைக்கப்பட்டவர்கள்.
உங்கள் அடையாளத்தை அறிந்தால், உங்கள் உயரம் மாறும்.
– போதகர். பெ. பெவிஸ்டன்