ஒரு நாட்டில் நீதியிலும் இரக்கத்திலும் பெயர் பெற்ற ராஜா ஒருவன் இருந்தான். அவன் நாட்டில் சட்டம் மிகவும் உறுதியானது. அந்த நாட்டில் அருள் என்ற இளைஞன் வாழ்ந்தான். அவன் நல்ல குடும்பத்தில் பிறந்திருந்தாலும், தவறான நண்பர்களுடன் சேர்ந்ததால் வழி தவறினான். ஒரு இரவு, திருட்டிற்காக ஒரு செல்வந்தனின் வீட்டுக்குள் புகுந்தான். ஆனால் அவன் அங்கே பிடிபட்டபோது, பயத்தில் தள்ளாடி, வீட்டின் உரிமையாளரை தள்ளியதில் அவர் கீழே விழுந்து மரணமடைந்தார். அந்த நிமிடம் அவன் வாழ்க்கை முழுவதும் இருளாக மாறிவிட்டது.
அவன் நீதிமன்றத்திற்குக் கொண்டு வரப்பட்டான். அவன் செய்த தவறு வெளிச்சத்துக்கு வந்தபோது, அவன் மனம் உடைந்து போனது. “நான் கொலை செய்ய நினைக்கவில்லை” என்று அழுதான். ஆனாலும் சட்டம் தெளிவாகவும் உறுதியாகவும் இருந்ததால் அவனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவன் தாய் நீதிமன்றத்தில் விழுந்து அழுதாள்: “என் மகன் தவறு செய்தான், ஆனால் அவன் கொலைகாரன் அல்ல தயவு செய்து இரக்கம் காட்டுங்கள்!” ஆனால் நீதிமன்றம் அமைதியாக இருந்தது. ராஜா மீண்டும் அதே தீர்ப்பை உறுதிப்படுத்த வேண்டிய நிலை.
தண்டனை நிறைவேற்றப்படும் நாளில், இளைஞன் அருள் முழுவதும் நடுங்கிக் கொண்டிருந்தான். அவன் கண்களில் பயமும், வருத்தமும் அவன் இருதயத்தை அடைத்தது, “ஒரு வாய்ப்பு இருந்தால் நான் மாறியிருப்பேன்” என்ற நொந்த உணர்வுடன் மரண மேடைக்கு தலைகுனிந்தவாறு ஏறினான்.
நாடே உற்றுநோக்கிய அந்த நேரத்தில் திடீரென்று ராஜா மேடைக்கு ஓடி வந்து, “அவனை நிறுத்துங்கள்!” என்று கட்டளையிட்டார். அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். “இந்த இளைஞன் குற்றவாளி தான். ஆனால் அவனுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தால், இனி தவறு செய்யமாட்டான் என உணருகிறேன். ஆயினும் நமது தேச சட்டம் நிறைவேற வேண்டியது அவசியமாக உள்ளது. எனவே, தண்டனையை நான் ஏற்கிறேன்,” என்றார். அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தார்கள். ராஜா தன் அரச ஆடைகளை கழற்றி, குற்றவாளியின் இடத்தில் நின்றார்.
அந்த காட்சியை பார்த்த உண்மைக் குற்றவாளி அருள் கதறிக் கொண்டே அழுதான். “நான் இந்த அன்புக்கு தகுதியானவன் அல்ல” என்று தலையை குனிந்தான். ராஜா தன் உயிரைத் தந்ததால் அவன் உயிர் காப்பாற்றப்பட்டது. அந்த நாளுக்கு பிறகு, அருள் முற்றிலும் மாறினான். அவன் வாழ்ந்த ஒவ்வொரு நாளும், அந்த அன்பின் தியாகத்தை நினைத்து, நல்வாழ்வு வாழ்ந்தான்.
இறைமக்களே, இந்த உவமை புனித வெள்ளியின் ஆழமான உண்மையை வெளிப்படுத்துகிறது. நாம் செய்த பாவங்களுக்கு சட்டப்படி நாம் தான் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். ஆனால் இயேசு கிறிஸ்து நமக்குப் பதிலாக சிலுவையில் நம் சார்பில் தண்டனையை ஏற்றுக்கொண்டார்.
அவர் நமக்காக உயிரைத் தந்த மெய்யான அன்பை உணர்ந்தால், நம்முடைய வாழ்க்கை மாற்றம் அடையாமல் இருக்க முடியாது.
“மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக் கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்; நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிர மங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித் திரிந்து, அவனவன் தன்தன் வழியிலே போனோம்; கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரம த்தையும் அவர்மேல் விழப்பண்ணினார்.” (ஏசாயா 53:4-6)
எனவே, நாம் மீட்படைய நமக்காக பலியான இறைவனை மனதார அணுகினால், பாவம், சாபம், வியாதி உள்ளிட்ட எல்லா அடிமைத்தனங்களிலிருந்தும் உறுதியாக மீட்கப்படுகிறோம். ஆகையால், இந்நாள் துக்கநாள் அல்ல, மீட்பின் நாள். மரணநாள் அல்ல, புனித நாள். அதனால் தான் அந்நாளை உலகமுழுவதும் “நிஷீஷீபீ திக்ஷீவீபீணீஹ்” (நல்ல வெள்ளி) என்று அனுசரிக்கிறோம்.
– போதகர். பெ. பெவிஸ்டன்