ஒரு சிறிய கிராமத்தில் மாலா என்ற ஒரு சிறுமி வாழ்ந்து வந்தாள். அவள் படிப்பில் மிகவும் ஆர்வமுள்ளவள். நல்ல வாழ்க்கை வாழ வேண்டும் என்ற பெரிய கனவு அவளுடைய இதயத்தில் இருந்தது. ஆனால் அவளுடைய குடும்ப நிலைமை மிகவும் வறுமையாக இருந்தது. அவளுடைய அப்பா தினக்கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தினார். அம்மாவும் வீட்டு வேலைகள் செய்து உதவி செய்தார். இருந்தாலும், பல நேரங்களில் அடிப்படை தேவைகளுக்கே போராட வேண்டிய சூழ்நிலை இருந்தது.
ஒருநாள் பள்ளியில் ஆசிரியர், “நாளைக்கு எல்லாரும் ஒரு செய்முறைப் பணியை செய்து கொண்டு வர வேண்டும்” என்று கூறினார். அந்த வார்த்தைகளை கேட்டதும் மாலாவுக்கு மிகுந்த உற்சாகம் ஏற்பட்டது. அவளும் மற்ற குழந்தை களைப் போல அழகாக செய்து காட்ட வேண்டும் என்ற ஆசை கொண்டாள். ஆனால் அதற்குத் தேவையான வரைபடக் காகிதம், கலர் பென்சில், பசை போன்ற பொருட்கள் அவளிடம் இல்லை.
வீட்டிற்கு வந்தவுடன் அவள் அம்மாவிடம் கேட்டாள். “அம்மா, எனக்கு இந்தப் பொருட்கள் வேண்டும்” என்று தயக்க த்துடன் சொன்னாள். ஆனால் அம்மா மிகவும் மெதுவாகவும் வருத்தத்துடனும், “மாலா, இப்போ வீட்டில் காசு இல்லை பிறகு வாங்கலாம்” என்று கூறினார். அந்த வார்த்தைகள் மாலாவின் இதயத்தை உடைத்தது. அவள் அமைதியாக தலைகுனிந்து நின்றாள். அவளுடைய ஆசை நொறுங்கியது.
அடுத்த நாள் பள்ளிக்கு செல்லும் வழியில், ஒரு கடையின் முன் அவள் நின்றாள். அவளுக்கு தேவையான அனைத்து பொருட்களும் அங்கே இருந்தது. அவளுடைய மனதில் இரண்டு குரல்கள் போராடின. ஒன்று “இதைக் கொண்டு போ” என்று சொன்னது; மற்றொன்று “இது தவறு” என்று எச்சரித்தது. வறுமையும் ஆசையும் சேர்ந்த அந்த நிமிடம், அவளை தவறான முடிவுக்கு தள்ளியது. அவள் ஒரு வரைபடக் காகிதத்தை எடுத்து மெதுவாக பையில் வைத்தாள்.
ஆனால் சில அடிகள் சென்றவுடன் அவள் மாட்டிக் கொண்டாள். கடைக்காரரும், அங்கிருந்தவர்களும் அவளை திட்டினர். “சின்ன வயசுலேயே திருடறியா?” என்று அவமானப்படு த்தினர். அந்த வார்த்தைகள் மாலாவின் இதயத்தை குத்தியது. அவள் வெட்கத்தாலும் பயத்தாலும் அழுதாள். அவளுக்கு தன் தவறு புரிந்தது. ஆனால் நடந்தது நடந்துவிட்டது.
அந்த நேரத்தில் அவளுடைய ஆசிரியர் அங்கு வந்தார். என்ன நடந்தது என்று கேட்டார். அனைத்தையும் கேட்டதும், அவர் கோபப்படவில்லை. மாறாக அமைதியாக கடைக்காரருக்கு பணம் கொடுத்தார். பின்னர் மாலாவை அருகில் அழைத்து மெதுவாகச் சொன்னார்: “மாலா, வறுமை ஒரு சோதனை தான். ஆனால் தவறு அதன் தீர்வு அல்ல. வாழ்க்கையில் நேர்மையே மனிதனின் உண்மையான செல்வம். இன்று நீ தவறு செய்தாய். ஆனால் அதை உணர்ந்தாய். அதுவே முக்கியம்.” அந்த வார்த்தைகள் மாலாவின் மனதை உருக்கியது. அவள் கண்கலங்கியபடி “மன்னிச்சுடுங்க சார் இனிமேல் நான் இப்படிச் செய்ய மாட்டேன்” என்று கூறினாள். அந்த நாள் அவளுடைய வாழ்க்கையில் ஒரு திருப்பு முனையாக மாறியது. அதன்பின் மாலா எவ்வளவு கஷ்டம் வந்தாலும் நேர்மையை விட்டுவிடாமல் வாழத் தீர்மானித்தாள். அவள் படிப்பிலும் முன்னேறினாள். வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைந்தபோது கூட, அந்த ஒரு நாளில் கற்ற பாடத்தை அவள் மறக்கவில்லை.
இக்கதை நமக்கு ஒரு ஆழமான உண்மையை கற்றுக்கொடுக்கிறது. வாழ்க்கையில் சோதனைகள் தவிர்க்க முடியாதவை. சில நேரங்களில் அவை நம்மை தவறான வழிக்கு இழுக்க முயலும். ஆனால் அந்த நிமிடத்தில் நாம் எடுக்கும் தீர்மானமே நமது எதிர்காலத்தை நிர்ணயிக்கிறது. தவறு செய்வது மனிதனுக்குச் சாதாரணம். ஆனால் தவறை உணர்ந்து திரும்புவது தான் உண்மையான வெற்றி.
இறைமக்களே, இறைவேதம் சொல்லுகிறது: “நாம் நம்முடைய பாவங்களை ஒப்புக்கொண்டால், அவர் விசுவாசியும் நீதிமானுமாயிருந்து நம்முடைய பாவங்களை மன்னித்து, எல்லா அநியாயத்திலிருந்தும் நம்மை சுத்திகரிப்பார்” (1 யோவான் 1:9).
ஆம், நாம் தவறினாலும் தேவன் நம்மை நிராகரிப்பதி ல்லை. நாம் மனந்திரும்பி அவரிடம் வரும்போது, அவர் நம்மை மன்னித்து புதிய வாழ்வை அளிக்கிறார். விழுவது வாழ்க்கையின் முடிவு அல்ல. மனந்திரும்பி எழுவது தான் புதிய தொடக்கம்.
எனவே எந்த சூழ்நிலையிலும் நேர்மையைப் பிடித்து பிடியுங்கள். தவறைத் தவிருங்கள். தேவனை நம்புங்கள். அவர் உங்களை சரியான பாதையில் நடத்துவார்.
– போதகர். பெ. பெவிஸ்டன்