ஒரு பணக்கார முதலாளியிடம் கார் ஓட்டுநர் வேலைக் காக மூவர் விண்ணப்பித்தனர். அவர்கள் திறமையை அறிய முதலாளி ஒரு கேள்வி கேட்டார். “ஒரு ஆபத்தான பள்ளம் இருக்கும் போது, அதன் அருகில் எவ்வளவு தூரம் வரை நீங்கள் வண்டியை ஓட்டிச் செல்வீர்கள்?” என்றார்.
முதல் ஓட்டுநர் தன்னம்பிக்கையுடன், “நான் திறமை யானவன். பள்ளத்தின் விளிம்பிற்கு ஒரு அடி தூரம் வரை பயமின்றி ஓட்டுவேன்” என்றான். இரண்டாவது ஓட்டுநர் அதை விட பெருமையுடன், “நான் இன்னும் நெருக்கமாக, ஒரு அங்குலம் தூரம் மட்டும் விட்டு ஓட்ட முடியும்” என்றான்.
ஆனால் மூன்றாவது ஓட்டுநர் அமைதியாக, “ஐயா, நான் அந்தப் பக்கமே செல்லமாட்டேன். ஆபத்து இருப்பதை அறிந்தவுடன் அதிலிருந்து விலகியே ஓட்டுவேன்” என்றான்.
முதலாளி சிந்தித்தார். பிறகு மூன்றாவது ஓட்டுநரையே வேலைக்கு தேர்ந்தெடுத்தார்.
இந்தச்சம்பவம் நமக்கு ஒரு முக்கியமான வாழ்க்கைப் பாடத்தை கற்றுக்கொடுக்கிறது. ஆபத்தை அறிந்தும் அதற்க ருகில் சென்று, “எவ்வளவு தூரம் வரை சமாளிக்கலாம்?” என்று சோதிப்பது ஞானமல்ல. உண்மையான ஞானம் என்பது ஆபத்தைத் தவிர்ப்பதே.
இன்றைய வாழ்க்கையில் பல்வேறு ஆபத்துகள் நம்மைச் சூழ்ந்துள்ளன. தவறான நட்புகள், தீய பழக்கங்கள், சோதனை தரும் சூழ்நிலைகள், கட்டுப்பாடற்ற ஆசைகள் இவை எல்லாம் வெளியில் சாதாரணமாகத் தோன்றினாலும், உள்ளே ஆபத்தை மறைத்து வைத்திருக்கின்றன. சிலர் அவற்றை “சிறிது முயற்சி செய்து பார்க்கலாம்” என்று அணுகு கிறார்கள். ஆனால் அந்தச் சிறிய முயற்சிதான் பெரிய வீழ்ச்சிக்குக் காரணமாகிறது. ஆகையால், நம் வாழ்க்கையில் ஆபத்தை உண்டாக்கக்கூடிய நபர்கள், இடங்கள், பழக்கங்கள் மற்றும் சூழ்நிலைகளிலிருந்து நம்மை விலக்கிக் கொள்ள வேண்டும். எச்சரிக்கும் வார்த்தைகளையும், அறிவுறுத்தும் மனிதர்களையும், ஒழுங்கு விதிகளையும் நாம் மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.
ஒரு தவறை தேவன் நமக்கு உணர்த்தும் போது அதை உடனே விட்டு விடுவதுதான் உண்மையான புத்திசாலித்தனம். “எனக்கு எதுவும் ஆகாது”, “நான் இதை சமாளிக்க முடியும்” என்ற அகந்தை நம்மை ஆபத்திற்கு தள்ளும். அகந்தை அழிவுக்கு முன் வருகிறது; தாழ்மை பாதுகாப்பைத் தருகிறது. வாழ்க்கையில் வெற்றி பெறுவது எல்லா சவால்களையும் நேருக்கு நேர் சந்திப்பதிலேயே இல்லை. சில நேரங்களில், சரியான முடிவு என்பது அந்தச் சவாலிலிருந்து விலகிச் செல்வதுதான். ஆபத்தை வெல்ல சிறந்த வழி, அதற்குள் செல்வதல்ல, அதைத் தவிர்ப்பதே.
ஆபத்தை அணுகாதவன் அறிவாளி;
ஆபத்தைத் தவிர்ப்பவன் பாதுகாப்பானவன்.
– போதகர். பெ. பெவிஸ்டன்