ஒரு விவசாயி தனது மாட்டுக் கொட்டகையில் வேலை செய்து கொண்டிருந்தபோது, தன் கைக்கடிகாரத்தை தவற விட்டார். அது சாதாரண கடிகாரம் அல்ல; அவருடைய நெருங்கிய நண்பர் அன்புடன் கொடுத்த நினைவுச் சின்னம். அதனால் அதை இழந்தது அவருக்கு மிகுந்த கவலையை ஏற்படுத்தியது.
அவர் கொட்டகையின் ஒவ்வொரு மூலையும் பலமுறை தேடினார். வைக்கோல் கட்டுகளையும், தரையையும், மறைந் திருக்கும் இடங்களையும் ஆராய்ந்தார். ஆனால் எங்கும் அந்தக் கடிகாரம் கிடைக்கவில்லை. மனம் உடைந்து, என்ன செய்வது என்று தெரியாமல் நின்றார்.
அப்போது அருகில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர் களை அழைத்து, “கைக்கடிகாரத்தை யார் கண்டுபிடித்துத் தருகிறார்களோ அவர்களுக்கு நான் பரிசு தருவேன்” என்று கூறினார்.
அதை கேட்ட சிறுவர்கள் அனைவரும் உற்சாகமாக கொட்டகைக்குள் ஓடிச் சென்றனர். ஒவ்வொருவரும் தங்கள் திறமையின்படி தேட ஆரம்பித்தனர். சிலர் வைக்கோல்களை அசைத்தனர், சிலர் மூலைகளில் குனிந்து பார்த்தனர், சிலர் தரையைத் தேடினர். ஆனால் அவர்களுடைய சத்தமும் அவசரமும் அதிகமாக இருந்ததால், கடிகாரம் எங்கிருக்கிறது என்று யாருக்கும் புரியவில்லை. நேரம் கடந்து மாலை ஆனது. அனைவரும் சோர்ந்து, “இது கிடைக்காது” என்று எண்ணி வீடு திரும்பினர். விவசாயியும் நம்பிக்கை இழந்து அமைதியாக அமர்ந்தார்.
அப்போது ஒரு சிறுவன் மட்டும் திரும்பி வந்து, “ஐயா, இன்னும் ஒரு முறை நான் முயற்சி செய்து பார்க்கட்டுமா? கண்டுபிடிக்க முடியும் என்று நினைக்கிறேன்” என்று கேட்டான். விவசாயி சம்மதித்தார்.
அந்தச் சிறுவன் கொட்டகைக்குள் சென்று கதவை மெதுவாக மூடி, அமைதியாக நின்றான். கண்களை மூடி, சுற்றியுள்ள ஒலிகளை கவனமாகக் கேட்டான். சில நிமிடங் களில், அவன் வெளியே வந்து கைக்கடிகாரத்தை எடுத்துக் கொடுத்தான்.
விவசாயி ஆச்சரியத்துடன், “எப்படி இதை கண்டுபிடித் தாய்?” என்று கேட்டார்.
அதற்கு சிறுவன் சிரித்தபடி, “அனைவரும் சேர்ந்து தேடியபோது அதிக சத்தம் இருந்தது. அதனால் கடிகாரத்தின் ஒலி கேட்கவில்லை. ஆனால் இப்போது அமைதியாக நின்ற போது அதன் ‘டிக்-டிக்’ ஓசை தெளிவாகக் கேட்கப்பட்டது. அந்த ஒலியைப் பின்தொடர்ந்து அதை கண்டுபிடித்தேன்” என்றான்.
இந்தச் சம்பவம் நமக்கு ஒரு ஆழமான உண்மையை உணர்த்துகிறது. வாழ்க்கையில் நாம் பல நேரங்களில் பதற்றத்திலும் அவசரத்திலும் தீர்வு தேடுகிறோம். ஆனால் அந்த சத்தம் நிறைந்த சூழலில் உண்மையான வழிகாட்டுதல் கேட்கப்படாது.
அமைதி உள்ள இடத்தில் தான்
தெளிவு உண்டாகிறது..!
நிதானமான மனதில் தான்
சரியான முடிவுகள் பிறக்கின்றன..!!
தேவன் நம்முடன் பேசுகிறார். ஆனால் நாம் அவசரமான வாழ்க்கையில், சத்தம் நிறைந்த எண்ணங்களில் மூழ்கி இருப் பதால், அவரது சத்தத்தை கேட்க முடியாமல் போகிறது. நாம் அமைதியாக, நிதானமாக அவரை நாடும் போது தான் அவர் நமக்கான வழியை காட்டுகிறார். நம் வாழ்க்கையில் பிரச்சனைகள் வந்தால் உடனே பதற்றப்படாமல், சற்று நின்று சிந்திக்க வேண்டும். அமைதியாக இருப்பது பலவீனம் அல்ல; அது மிகப்பெரிய பலம்.
அமைதியில் தெளிவு பிறக்கும்; நிதானத்தில் வழி தெரியும்..!
– போதகர். பெ. பெவிஸ்டன்