இந்திய மண்ணில் ஏழை, எளிய மக்களுக்கு அர்ப்பணிப் புடன் சேவை செய்து, உலகமெங்கும் அன்பும் மரியாதையும் பெற்றவர் அன்னை தெரசா. அவருடைய வாழ்க்கை முழுவதும் தன்னலமற்ற சேவைக்கே அர்ப்பணிக்கப்பட்டது. தன்னுடைய தேவைகளுக்காக அவர் ஒருபோதும் யாரிடமும் கை நீட்டிய தில்லை; ஆனால் ஏழைகளின் நலனுக்காக அவர் உலகமெங்கும் நிதி உதவிகளைப் பெற்றுத் தந்தார்.
அன்னை தெரசா இந்தியாவில் தன் சேவையை ஆரம்பித்த காலங்களில், மிகவும் எளிய முறையில் பணியாற்றினார். அவர் தெருக்களிலும் சந்தைகளிலும் சென்று, தன் சேவை மையங்களுக் கான உதவிகளை கேட்டுக்கொண்டிருந்தார். அது அவருடைய தினசரி பணிகளில் ஒன்றாகவே இருந்தது.
ஒரு நாள், அவர் ஒரு கடைக்காரரிடம் நிதி உதவி கேட்டு நின்றார். அந்தக் கடைக்காரர் வெற்றிலைப் பாக்கு சாப்பிட்டு கொண்டிருந்தார். அன்னை தெரசா அவரிடம் பணிவுடன் உதவி கேட்டபோதும், அவர் கவனிக்காதது போல் நடந்துகொண்டார். அன்னை தெரசா தளராமல், மீண்டும் ஒருமுறை அவரிடம் உதவி கேட்டார்.
இதனால் சினந்த கடைக்காரர், அவரை அவமதிக்கும் விதமாக, அன்னை தெரசா நீட்டிய கையில் எச்சிலைத் துப்பினார். இத்தகைய அவமானத்திற்கும் அன்னை தெரசா மனம் தளரவில் லை. மாறாக, அவர் மிக அமைதியாகவும் அன்புடனும் கூறினார்: “நீங்கள் கொடுத்ததை நான் எனக்காக வைத்துக் கொள்கிறேன்; ஆனால் என் விடுதியில் உள்ள அனாதை குழந்தைகளுக்காக ஏதாவது கொடுக்க முடியுமா?”
அவருடைய இந்த வார்த்தைகள் அந்தக் கடைக்காரரின் மனதை ஆழமாகத் தொட்டன. உடனே அவர் வெட்கமடைந்து, “இவ்வளவு சகிப்புத்தன்மை கொண்டவரை நான் இதுவரை பார்த்த தில்லை” என்று கூறி, தன்னிடம் இருந்த பணத்தை முழுவதுமாக அந்த அனாதை குழந்தைகளின் நலனுக்காக வழங்கினார்.
இறைமக்களே, தன்னலமற்ற சேவையின் உச்சமாக அன்னை தெரசாவின் வாழ்க்கை விளங்குகிறது. பிறரின் துயரத் தை தன் துயரமாக எண்ணி, அவர்களுக்கு உதவ வேண்டும் என்ற மனப்பாங்கு தான் உண்மையான மனிதநேயத்தின் அடையாளமா கும். இன்றைய உலகில், பலர் நன்மை செய்வதற்கும் கூட பிரதிபலன் எதிர்பார்க்கிறார்கள்.
திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் வழங்கப்படும் பரிசுகள் கூட, ஒரு வகையான எதிர்பார்ப்பை உருவாக்குகின்றன. “நாம் கொடுத்தோம்; அவர்கள் திருப்பிக் கொடுக்க வேண்டும்” என்ற எண்ணம் பலரிடமும் நிலவுகிறது. ஆனால் திருமறை நமக்கு வேறொரு உயர்ந்த சிந்தனையை கற்றுத் தருகிறது:
“உங்களுக்கு நன்மை செய்கிறவர்களுக்கே நீங்கள் நன்மை செய்தால், உங்களுக்குப் பலன் என்ன?” (லூக்கா 6:33)
நன்மை செய்வது என்பது ஒரு பரிமாற்றம் அல்ல; அது ஒரு அர்ப்பணிப்பு. எந்த எதிர்பார்ப்பும் இன்றி செய்யப்படும் உதவி தான் உண்மையான நற்செயல். இன்றைய நவீன உலகில், பிரதி பலன் எதிர்பார்க்காமல் உதவும் நல்ல இதயங்களே சமுதாயத்தின் காயங்களுக்கு மருந்தாக இருக்கின்றன. அவர்கள் தான் மனித நேயத்தின் விளக்குகளாக விளங்குகிறார்கள்.
நாம் நற்செயல் செய்ய முனைந்தால், பல தடைகளும், அவமானங்களும், ஏமாற்றங்களும் நம்மை சந்திக்கலாம். சில நேரங் களில் நாம் செய்த நன்மைக்கே எதிராகவே பதில்கள் வரலாம். இருப்பினும், அதனால் நாம் சோர்ந்து போகக் கூடாது.
திருமறை நமக்கு ஊக்கமளிக்கிறது:
“நன்மை செய்வதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்து போகாதிருந்தால், ஏற்ற காலத்தில் நன்மைகளை அறுப்போம்” (கலாத்தியர் 6:9)
அன்னை தெரசாவின் வாழ்க்கை இதையே கற்றுத் தருகிறது.
அவமானத்தை அன்பால் வெல்லலாம்,
கோபத்தை அமைதியால் மாற்றலாம்,
சுயநலத்தை தியாகத்தால் ஜெயிக்கலாம்.
ஆகையால்,
நாம் உதவும் கையை நீட்டுவோம்,
நாம் அன்பை விதைப்போம்,
நாம் மனிதநேயத்தை வளர்ப்போம்.
அப்பொழுது, இந்த உலகம் மேலும் அழகானதாக மாறும்.
– போதகர். பெ. பெவிஸ்டன்