ஒரு கிராமத்தில் வசித்த ஒரு விவசாயியின் கழுதை, ஒருநாள் தவறுதலாக பாழடைந்த ஒரு பழைய கிணற்றில் விழுந்துவிட்டது. அந்தக் கிணறு பல ஆண்டுகளாக பயன் படுத்தப்படாமல் இருந்ததால், அது யாருக்கும் எந்தப் பயனும் அளிக்காததாகிவிட்டது. மேலும், வயதாகி பலவீன மடைந்த அந்தக் கழுதையும் விவசாயிக்கு பெரிதாக உதவியாக இல்லை.
இந்நிலையை எண்ணிய விவசாயி, “இந்தக் கிணற்றை யும் மூட வேண்டும்; கழுதையையும் மீட்க முடியாத நிலை யில் இருக்கிறது” என்று முடிவு செய்தான். ஆகையால், ஊரிலிருந்த மக்களை அழைத்து, அந்தக் கிணற்றை கழுதை யுடன் சேர்த்து மூடிவிடத் திட்டமிட்டான்.
ஊர் மக்கள் அனைவரும் கற்கள், மண், குப்பைகள் போன்றவற்றை எடுத்துக்கொண்டு வந்து கிணற்றுக்குள் எறியத் தொடங்கினர். தன் மீது விழும் மண், கற்கள் மற்றும் குப்பைகளால் துயரமடைந்த கழுதை, வேதனையுடன் பலமுறை கத்திக்கொண்டே இருந்தது. அந்தக் குரல் மனதை உருக்கியதாயிருந்தாலும், மக்கள் தங்கள் செயலை நிறுத்த -வில்லை.
ஒரு கட்டத்தில், அந்தக் கழுதை உண்மையை உணர்ந்தது. “இவர்கள் எதையும் நிறுத்தப்போவதில்லை; என்ன நடக்கிறதோ அதை ஏற்றுக்கொள்வதே ஒரே வழி” என்று அது முடிவு செய்தது.
அந்த நேரத்திலிருந்து அதன் நடத்தை மாறியது. தன் மீது விழும் மண் மற்றும் குப்பைகளை அது ஒவ்வொன்றாக உதறி விடத் தொடங்கியது. பின்னர், அவற்றைத் தன் காலடியில் மிதித்து, மெதுவாக மேலே ஏறத் தொடங்கியது. தன் மீது விழுந்த ஒவ்வொரு குப்பையையும் அது ஒரு தடையாக அல்ல, ஒரு படிக்கட்டாக மாற்றிக் கொண்டது.
இப்போது அது கத்தவில்லை. மேலே பார்த்தும் இல்லை. அமைதியாக, விழும் ஒவ்வொரு மண்ணையும் உதறி, அதை மிதித்து, இன்னொரு படி மேலேறிக் கொண்டே இருந்தது. சில நேரம் கழித்து, அங்கு இருந்தவர்கள் ஒரு அதிசயத்தைப் பார்த்தனர். கிணற்றுக்குள் எறியப்பட்ட மண், குப்பைகள் அனைத்தும் உயர்ந்து கொண்டிருக்க, அந்தக் கழுதையும் அதனுடன் மேலேறி வந்தது. இறுதியில், அது கிணற்றின் விளிம்பை அடைந்து, ஒரு துள்ளலுடன் வெளியேறி ஓடிவிட்டது.
இறைமக்களே, இந்தச் சம்பவம் நமக்கு ஆழமான ஒரு வாழ்க்கைப் பாடத்தை கற்றுத் தருகிறது. நாம் வாழ்வில் சந்திக்கும் இடர்பாடுகள், அவமானங்கள், தோல்விகள் மற்றும் பிறர் பேசும் எதிர்மறையான வார்த்தைகள் இவைகளையே மனதில் சுமந்து கொண்டிருப்பதால்தான் பலரால் முன்னேற முடியாமல் போகிறது. சிலர் இத்தகைய சூழ்நிலைகளை “விதி” என்று ஏற்றுக்கொண்டு, தாழ்வு மனநிலையிலும் கூடத் தற்கொலை எண்ணங்களிலும் சிக்கிக்கொள்கிறார்கள். இது மிகவும் வேதனையான நிலை. ஆனால் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டியது இதுதான்:
பிரச்சினைகளுக்கு தீர்வு இல்லையா? அல்லது தீர்வை நோக்கி நாம் நகரத் தயங்குகிறோமா? உண்மையில், வாழ்க்கையில் வரும் ஒவ்வொரு பிரச்சினைக்கும் ஒரு தீர்வு இருக்கிறது. அந்தத் தீர்வைத் தேடி முன்னேறும் மனப்பாங்கு தான் வெற்றிக்கு வழி காட்டுகிறது. தோல்விகளையும் அவமானங்களையும் படிக்கட்டுகளாக மாற்றிக்கொண்டவர்களே உலகில் சாதனையாளர்களாக உயர்ந்துள்ளனர். அவர்கள் சந்தித்த சிரமங்களை காரணமாகக் கொண்டு வீழவில்லை; மாறாக, அதையே தங்கள் முன்னேற்றத்தின் அடிப்படையாக மாற்றினர்.
இறைவேதத்தில், யோசேப்பு என்ற இளைஞனின் வாழ்க்கை இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும். அவன் சொந்த சகோதரர்களால் பொறாமையின் காரணமாக குழியில் தள்ளப்பட்டான். ஆனால் அந்தத் துன்பமான அனுபவமே பின்னர் அவனை எகிப்து நாட்டில் உயர்ந்த பதவிக்குக் கொண்டு சென்றது. அவன் தன் குடும்பத்தையே காப்பாற்றும் நிலைக்கு உயர்த்தப்பட்டான்.
இதைப் பற்றித் திருமறை கூறுகிறது:
“கர்த்தர் உயர்ந்தவராயிருந்தும் தாழ்மையுள்ளவனை நோக்கி பார்க்கிறார்; மேட்டிமையானவனையோ தூரத்திலிருந்து அறிகிறார்” (சங்கீதம் 138:6).
“அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து தூக்கிவிடுகிறார்; எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்; அவனைப் பிரபுக்களோடும், தமது ஜனத்தின் அதிபதிகளோடும் உட்காரப் பண்ணுகிறார்” (சங்கீதம் 113:7-8).
ஆகையால், நம் வாழ்க்கையில் ஏற்படும் தீமைகள் எல்லாம் வீணானவை அல்ல. அவற்றிற்குள் ஒரு தெய்வீக நோக்கம் மறைந்திருக்கலாம். நம் தேவன், தீமையை நன்மை யாக மாற்றும் வல்லமையுடையவர்.
எனவே, தோல்விகளை நினைத்து துவள வேண்டாம்.
அவமானங்களை மனதில் சுமந்து நடக்க வேண்டாம்.
எதிர்மறை வார்த்தைகளால் உடைந்து போக வேண்டாம்.
அவற்றையெல்லாம் உதறி விடுங்கள்!
அவற்றை படிக்கட்டுகளாக மாற்றுங்கள்!
துணிவுடன் எழுந்து நில்லுங்கள்.
நம்பிக்கையுடன் முன்னேறுங்கள்.
நிச்சயம் வெற்றி உங்களுக்கே சொந்தமாகும்.
அவமானங்களை உதறிடுங்கள் – உயர்வை அடையுங்கள்!
– போதகர். பெ. பெவிஸ்டன்