ஒரு கிராமத்தில் வசித்து வந்த ஒரு எளிய விவசாயி, தினமும் தன் வீட்டில் தயாரிக்கும் 500 கிராம் வெண்ணையை அருகிலிருந்த ஒரு பேக்கரி கடைக்குக் கொண்டு சென்று கொடுத்து வந்தான். அந்த பேக்கரி கடைக்காரரும் அவ்வப் போது அதற்கான பணத்தை வழங்கி வந்தார். இவ்வாறு அவர்களுக்குள் நம்பிக்கையுடனான பரிமாற்றம் பல நாட்களாக நடைபெற்றுக் கொண்டிருந்தது.
ஒரு நாள், பேக்கரி கடைக்காரருக்கு ஒரு சந்தேகம் தோன்றியது. “விவசாயி கொடுத்து வரும் வெண்ணை உண்மையிலேயே 500 கிராமா?” என்ற எண்ணம் அவரை ஆட்கொண்டது. உடனே அவர் அந்த வெண்ணையை எடை பார்த்தார். அதில், குறிப்பிடப்பட்ட அளவான 500 கிராமை விட குறைவாக இருப்பது அவருக்குத் தெரிய வந்தது. இதனால் கடும் கோபமடைந்த கடைக்காரர், “நான் இவ்வளவு நாட்களாக ஏமாற்றப்பட்டு வந்தேனே!” என்று எண்ணி, அந்த விவசாயியை உள்ளூர் நீதிபதியிடம் புகார் செய்தார்.
வழக்கு நீதிபதியின் முன் வந்தது. நீதிபதி அமைதியாக விவசாயியிடம் கேட்டார்: “நீ வெண்ணையை அளப்பதற்கு எடை கருவிகளைப் பயன்படுத்துகிறாயா?” அதற்கு விவசாயி மிகவும் எளிமையாக பதிலளித்தார்: “ஐயா, என்னிடம் எடைக் கருவிகள் எதுவும் இல்லை. ஆனால் நான் ஒரு முறையைப் பயன்படுத்துகிறேன்.”
அது என்ன முறை? என்று நீதிபதி ஆர்வமாகக் கேட்டார். விவசாயி விளக்கினார்: “ஐயா, நான் இந்த பேக்கரி கடைக்குக் வெண்ணை கொடுக்க ஆரம்பித்த நாளிலிருந்தே, அவர்களுடைய கடையில் இருந்து தினமும் ஒரு பிரட் வாங்குவது எனக்கு வழக்கமாகிவிட்டது. அந்த பிரட்டின் மேல் 500 கிராம் என்று எழுதப்பட்டிருக்கும். அதனை அளவா கக் கொண்டு, அதற்கு சமமான எடையில் வெண்ணையை அளந்து கொடுத்து வந்தேன். எனவே, நான் எவரையும் ஏமாற்ற வேண்டும் என்று நினைக்கவில்லை.”
இந்த விளக்கத்தை கேட்ட நீதிபதி, விவசாயியிடம் எந்தத் தவறும் இல்லை என்பதை உணர்ந்தார். உண்மை யில் தவறு செய்தது பேக்கரி கடைக்காரரே என்பதும் தெளி வாயிற்று. அவர் அளவில் குறைவான பிரட்டை விற்றதால், அதையே அடிப்படையாகக் கொண்டு விவசாயியும் வெண்ணை யை அளந்திருந்தார்.
இதனால் நீதிபதி, பேக்கரி கடைக்காரரை எச்சரித்து அனுப்பினார். “நீ மற்றவர்களை ஏமாற்ற நினைத்தால், இறுதி யில் நீயே ஏமாறுவாய்” என்ற பாடத்தை அவர் தெளிவாக உணர்ந்தார்.
இறைமக்களே, இந்தச் சம்பவம் நமக்கு ஒரு முக்கிய மான சத்தியத்தை எடுத்துரைக்கிறது. நாம் எந்த அளவினால் அளக்கிறோமோ, அதே அளவினால்தான் நமக்கும் அளக்கப் படும். பிறரை ஏமாற்ற வேண்டும் என்று ஒருவர் நினைக்கும் போது, உண்மையில் அவர் தன்னையே ஏமாற்றிக் கொள்கி றார். வாழ்க்கை என்பது ஒரு விதைப்பும் அறுவடையும் கொண்ட பயிர்செய்கையைப் போன்றது.
திருமறை இதைப்பற்றி தெளிவாகக் கூறுகிறது:
“மனுஷன் எதை விதைக்கிறானோ, அதையே அறுப்பான்” (கலா.6:7).
“சிறுக விதைக்கிறவன் சிறுக அறுப்பான்; பெருக விதைக்கிறவன் பெருக அறுப்பான்” (2 கொரி. 9:6).
உப்பு சாப்பிட்டவன் தண்ணீர் குடிக்க வேண்டியது போல, மனிதன் செய்த செயல்களின் விளைவுகளை அவன் தவிர்க்க முடியாது. குறுகிய லாபத்திற்காக தவறான வழியில் ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கை, இறுதியில் வருத்தத்தையும் வீணான போராட்டத்தையும் மட்டுமே தரும்.
“சொற்ப பணம் தேடி, அற்ப மனம் ஓடி,
ஆயுள் வரை வாடி, அடங்குகிறது நாடி”
என்பதுபோன்ற வாழ்க்கை வாழ்வதில் என்ன பயன்?
ஆகையால், நாம் நல்லதை விதைப்போம். நியாயத் தையும் நேர்மையையும் கடைப்பிடிப்போம். அன்பையும் நீதியையும் வாழ்க்கையில் வளர்ப்போம். அப்போதுதான் நாம் நன்மையை அறுவடையாகப் பெறுவோம்.
– போதகர். பெ. பெவிஸ்டன்