சிறுவன் ஜானியும், அவனது சகோதரி மேரியும் கோடை விடுமுறையை கழிப்பதற்காக தங்கள் பாட்டியின் வீட்டிற்கு சென்றிருந்தனர். அந்த வீடு இயற்கை சூழலில் அமைந்திருந்ததால், அவர்கள் இருவருக்கும் அது மிகவும் மகிழ்ச்சியான இடமாக இருந்தது. மரங்கள், பறவைகள், சிறிய விலங்குகள் அவற்றை ரசித்து அவர்கள் நாட்களை சந்தோஷமாக கழித்தனர்.
ஒருநாள், ஜானிக்கு விளையாட ஒரு சுண்டுவில்லை பாட்டி கொடுத்தார். அதை பார்த்த ஜானி மிகுந்த உற்சாக மடைந்தான். மறுநாள் காலையில், அதை எடுத்துக்கொண்டு வெளியே சென்றான். அங்கே பறவைகள் மற்றும் சிறிய உயிரினங்களை குறி வைத்து அடிக்க முயன்றான். ஆனால் அவனால் சரியாக குறி வைத்து அடிக்க முடியவில்லை. பலமுறை முயன்றும் தோல்வியடைந்ததால் சோர்வுடன் வீட்டிற்கு திரும்பினான்.
வீட்டிற்கு வந்தபோது, பாட்டி வளர்த்துக்கொண்டிருந்த ஒரு வாத்து அவன் கண்களில் பட்டது. “இதையாவது அடித்து பார்க்கலாம்” என்ற தவறான எண்ணம் அவனுள் தோன்றியது. சுண்டுவில்லை எடுத்துக்கொண்டு அதை குறிவைத்தான். இம்முறை அவன் அடித்த கல் நேராக வாத்தின் தலையில் பட்டது. உடனே அது கீழே விழுந்து இறந்தது.
அதை பார்த்த ஜானி மிகவும் பயந்தான். “பெரிய தவறு செய்துவிட்டேனே!” என்ற பயம் அவனை ஆட்கொண் டது. யாருக்கும் தெரியாமல் அந்த வாத்தை ஒரு இடத்தில் புதைத்து மறைத்துவிட்டான். ஆனால் அவனுக்குத் தெரியா மல், அவன் சகோதரி மேரி இந்த நிகழ்வை முழுவதும் பார்த்துக்கொண்டிருந்தாள்.
அதன்பின் மேரி அவனை மிரட்டத் தொடங்கினாள். “நீ செய்ததை நான் பார்த்தேன். நான் சொல்வதை கேட்கவில் லை என்றால் பாட்டியிடம் சொல்லிவிடுவேன்” என்றாள். அந்த ஒரு வார்த்தை ஜானியை கட்டுப்படுத்திவிட்டது.
அடுத்த நாள் முதல், பாட்டி கொடுத்த வேலைகளை மேரி செய்யாமல், “ஜானி இதை செய்து விடுவான்” என்று சொல்லத் தொடங்கினாள். ஜானி மறுத்தாலோ, “வாத்து ஞாபகம் இருக்கிறதா?” என்ற ஒரே வார்த்தையால் அவனை மௌனமாக்கிவிடுவாள். இவ்வாறு ஒவ்வொரு நாளும் மேரி அவனை கட்டுப்படுத்தினாள்.
ஜானியின் விடுமுறை இனிமையாக இல்லாமல், ஒரு தண்டனை போல மாறியது. அவன் மனம் குற்ற உணர்வாலும் பயத்தாலும் சுமையடைந்தது. அவனுக்குள் அமைதி இல்லை. அவன் சுதந்திரம் பறிக்கப்பட்டது.
சில நாட்கள் இவ்வாறு சென்றபின், ஜானியால் இதை தாங்க முடியவில்லை. ஒரு நாள் தைரியம் செய்து பாட்டி யிடம் சென்றான். அழுதபடி நடந்ததையெல்லாம் ஒப்புக் கொண்டான். “பாட்டி, நான் தவறு செய்துவிட்டேன்” என்று மனந்திரும்பி கூறினான். அதை கேட்ட பாட்டி அவனைத் தழுவிக்கொண்டு மெதுவாகச் சொன்னார்: “ஜானி, நீ செய்த தை நான் அன்றே பார்த்தேன். அன்றே உன்னை மன்னித்து விட்டேன். அதனால் தான் உன்னிடம் எதுவும் சொல்லவில் லை. இனிமேல் நீ பயப்பட வேண்டாம்.” இந்த வார்த்தைகள் ஜானியின் மனத்தில் இருந்த கனமான சுமையை உடைத்து விட்டது. குற்ற உணர்வு மறைந்தது. அவன் மீண்டும் சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழத்தொடங்கினான்.
இந்தக் கதை நமக்கு ஒரு முக்கியமான உண்மையை கற்றுக்கொடுக்கிறது. மனிதனின் வாழ்க்கையில் மிகப்பெரிய போராட்டம் வெளியில் அல்ல, உள்ளத்தில் நடக்கிறது. குற்ற உணர்வு என்பது ஒரு மறைமுக சங்கிலி. அது மன அமைதியை கெடுக்கிறது, நம்மை அடிமையாக்கு கிறது. நாம் செய்த தவறுகளை மறைக்க முயன்றால், அது நம்மை மேலும் கட்டிப்போடும். ஆனால் அதை ஒப்புக் கொண்டால், அது நம்மை விடுவிக்கும். ஒப்புதல் தான் சுதந்திரத்திற்கு வழி. ஆவிக்குரிய வாழ்க்கையிலும் இதே உண்மை பொருந்துகிறது. மனிதன் செய்த பாவங்கள் அவனை கட்டிப்போடும். ஆனால் மனந்திரும்பி தேவனிடம் வரும்போது, அவர் மன்னித்து விடுவிக்கிறார்.
இறைவேதம் கூறுகிறது: “நாம் நம்முடைய பாவங்களை ஒப்புக்கொண்டால், அவர் விசுவாசியும் நீதிமானுமாயிருந்து நம்முடைய பாவங்களை மன்னித்து, எல்லா அநியாயத் திலிருந்தும் நம்மை சுத்திகரிப்பார்.” ஆகையால், குற்ற உணர் வில் சிக்கி வாழ வேண்டாம். உண்மையை ஒப்புக்கொள் வோம். மன்னிப்பை ஏற்றுக்கொள்வோம். புதிய வாழ்க்கையை தொடங்குவோம்.
– போதகர். பெ. பெவிஸ்டன்